127-வது ‌மலர் கண்காட்சி: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 7.5 லட்சம்‌ மலர்‌ நாற்றுகள்‌ நடவு

127-வது ‌மலர் கண்காட்சி: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 7.5 லட்சம்‌ மலர்‌ நாற்றுகள்‌ நடவு
Updated on
1 min read

உதகை: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடக்கும் 127-வது மலர் கண்காட்சிக்காக 7.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டம் உதகை, அரசு தாவரவியல்‌ பூங்காவில்‌ வரும் மே மாதம்‌ நடைபெற இருக்கும்‌ 127-வது மலர்‌ காட்சியை முன்னிட்டு பூங்காவின்‌ பல்வேறு பகுதிகளில்‌ மலர்‌ பாத்திகள்‌ அமைத்து, பல வண்ண மலர்ச்‌ செடிகள்‌ நடவு‌ செய்யப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு இன்காமேரிகோல்டு, பிரன்ச்‌ மேரிகோல்டு போன்ற மலர்‌ நாற்றுகள்‌ நடும்‌ பணியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தொடங்கி வைத்தார்.

இந்த ஆண்டு சிறப்பு அம்சமாக பொதுமக்கள்‌ மற்றும்‌ சுற்றுலாப்‌ பயணிகளைக்‌ கவரும்‌ வகையில்‌ ஜெரேனியம்‌, சைக்லமன்‌, பால்சம்‌ மற்றும்‌ பல புதிய ரக ஆர்னமெண்டல்கேல்‌, ஓரியண்டல்லில்லி, ஆசியாடிக்லில்லி, டேலியாக்கள்‌ மற்றும்‌ பிகோனியா, கேண்டீடப்ட்‌, பிரன்ச்‌ மேரிகோல்டு, பேன்சி, பெட்டுனியா, பிளாக்ஸ்‌, ஜினியா, ஸ்டாக்‌, வெர்பினா. சன்பிளவர்‌, சிலோசியா, ஆன்டிரைனம்‌, டயான்தஸ்‌, ஆஸ்டர்‌, ஜெர்பரா, க்ரைசாந்திமம்‌, டெல்பினியம்‌, சால்வியா, ஆந்தூரியம்‌ போன்ற 275 வகையான விதைகள்‌ மற்றும்‌ செடிகள்‌ ஜப்பான்‌, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும்‌ நெதர்லாந்து ஆகிய நாடுகளிலில் இந்தும்‌ இந்தியாவின்‌ பல்வேறு மாநிலங்களிலிருந்தும்‌ பெறப்பட்டு மலர்செடிகள்‌ உற்பத்தி செய்யப்பட்டு பூங்காவில்‌ பல்வேறு பகுதிகளில்‌ 7.5 லட்சம்‌ மலர்‌ நாற்றுகள்‌ நடவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

நடவு செய்யப்படும்‌ மலர்‌ நாற்றுகளுக்கு பனியின்‌ தாக்கம்‌ ஏற்படாத வண்ணம்‌ கோத்தகிரி மிலார்‌ செடிகளைக்‌ கொண்டு பாதுகாப்பு செய்யப்படும்‌.இந்த ஆண்டு எதிர்வரும்‌ மலர்க்‌ காட்சியையொட்டி மலர்க்காட்சி மாடம்‌ மற்றும்‌ கண்ணாடி மாளிகையில்‌ 40,000 வண்ண மலர்த்‌ தொட்டிச்‌ செடிகள்‌ அடுக்கி வைக்க விரிவான ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டு வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in