

சென்னை: ரூ.6 ஆயிரம் கட்டணத்துடன் கோவளத்தில் ஹெலிகாப்டர் சவாரி தொடங்கப்பட்டுள்ளது. கோவளத்தில் தனியார் நிறுவனம் மூலம் கடந்த 2023-ம் ஆண்டு தீபாவளி திருநாளில் ஹெலிகாப்டர் சவாரி சுற்றுலா தொடங்கப்பட்டது. இதில் நபர் ஒருவருக்கு ரூ.6 ஆயிரம் கட்டணம் செலுத்தி 1,000 அடி உயரத்தில் பறந்து 5 நிமிடத்துக்கு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இயற்கை காட்சிகளை கழுகு பார்வையில் கண்டுகளிக்கும் வகையில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடைபெற்று வந்தது. பின்னர் திடீரென ஹெலிகாப்டர் சுற்றுலா சவாரி நிறத்தப்பட்டது.
இந்நிலையில் தனியார் நிறுவனம் சார்பில் நேற்று முன் தினம் (ஜன. 10) மீண்டும் தொடங்கிய இந்த ஹெலிகாப்டர் சுற்றுலா பயணம் இன்று (ஜன. 12) வரை நடைபெறவுள்ளது. பின்னர், ஜன. 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த, சுற்றுலாவில் நபர் ஒருவருக்கு ரூ.6,000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பைலட்டை தவிர்த்து 6 பேர் செல்லும் வகையில், இந்த ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த, ஹெலிகாப்டர் வான்வெளியில் அதிகபட்சமாக 1,000 அடி உயரம் வரை பறந்து செல்கிறது. 5 நிமிடம் முதல் 7 நிமிடம் வரை பயண நேரம் வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று ஆன்லைனில் 6 ஆயிரம் கட்டணம் செலுத்தி, முன்பதிவு செய்தவர்கள் பலர் ஆர்வமாக கிழக்கு கடற்கரை சாலையில் ஹெலிகாப்டரில் வானில் பறந்து அழகிய கடற்கரை, பக்கிங்காம் கால்வாய், பழைய மாமல்லபுரம் சாலையின் அழுகிய வானுயர்ந்த கட்டிடங்கள் மற்றும் இயற்கை காட்சிகளை கழுகு பார்வையில் வானில் வட்டமடித்தபடியே ஆர்வமாக பார்த்து ரசித்தனர்.
முன்னதாக, ஹெலிகாப்டர் பயணம் மேற்கொள்ள வந்த பயணிகளுக்கு உடல் எடை பரிசோதனை செய்யப்பட்டு ஆதார் எண் உறுதி செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.