

பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் தமிழக பக்தர்கள் பங்கேற்க வசதியாக, திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக வாராணசிக்கு பிப். 5-ம் தேதி பாரத் கவுரவ் சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜன. 13 முதல் பிப். 26 வரை மகா கும்பமேளா, 45 நாள்கள் நடைபெற உள்ளது. இதில் 43 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பாரத் கவுரவ் சிறப்பு சுற்றுலா ரயிலை இயக்க ஐஆர்சிடிசி முடிவு செய்துள்ளது. அதன் விவரம்:
இந்த ரயில் திருநெல்வேயில் இருந்து பிப்.5-ம் தேதி புறப்படுகிறது. சுற்றுலா பயணம் பிப். 13-ம் தேதி முடிவடைகிறது. வாராணசி, பிரயாக்ராஜ், அயோத்தி ஆகிய இடங்களுக்கு பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இந்த ரயில் திருநெல்வேலியில் புறப்பட்டு, தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், விழுப்புரம், தாம்பரம், சென்னை எழும்பூர், விஜயவாடா வழியாக செல்கிறது. எகானமி வகுப்பில் பயணிக்க ஒருவருக்கு ரூ.26,850-ம், ஸ்டான்டர்ட் வகுப்புக்கு ரூ.38,470-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் தொடர்பாக மேலும் விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு 9003140680, 8287931977 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம். இந்த தகவல் ஐ.ஆர்.சி.டி.சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.