ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் நடைமுறை: ஐகோர்ட் புதிய உத்தரவு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்வோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த இ-பாஸ் வழங்கும் நடைமுறையை முறையாக அமல்படுத்தி நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை வெகுவாக கட்டுப்படுத்தும் வகையில், இ-பாஸ் திட்டத்தை அமல்படுத்த நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இ-பாஸ் வழங்கும் முன்பாக சுற்றுலா பயணிகள் எந்த மாதிரியான வாகனங்களில் வருகின்றனர், எத்தனை பேர் வருகின்றனர், எத்தனை நாட்களுக்கு தங்கவுள்ளனர் போன்ற விவரங்களை கேட்டுப்பெற வேண்டும் எனவும், நீதிபதிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் வழங்கும் திட்டம் முறையாக அமல்படுத்தப்படவில்லை என அதிருப்தி தெரிவித்தனர். மேலும் இ-பாஸ் தொடர்பாக பயணிகளிடம் எந்த சோதனையும் நடத்தப்படுவதில்லை. நீதிமன்ற உத்தரவுகள் காகித வடிவில் மட்டுமே உள்ளது, என குற்றம் சாட்டினர். அப்போது அரசு தரப்பில், மலைவாசஸ்தலங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் வழங்கும் நடைமுறையை முறையாக பின்பற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

அதையேற்க மறுத்த நீதிபதிகள், “நீதிமன்றத்துக்கு தவறான தகவல்களை அளிக்க வேண்டாம். இ-பாஸ் திட்டத்தை முறையாக அமல்படுத்தினால் மட்டுமே சுற்றுலா தலத்துக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் நன்மை பயக்கும். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இ-பாஸ் திட்டத்தை முறையாக அமல்படுத்தியது தொடர்பாக நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் இ-பாஸ் வழங்கும்போதே போதுமான விவரங்களை கண்டிப்பாக பெற வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை வரும் நவ.4-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in