புதுப்பொலிவு பெறும் மெரினா நீச்சல் குளம்: ஒரு வாரத்தில் திறக்க மாநகராட்சி நடவடிக்கை

புதுப்பொலிவு பெரும் மாநகராட்சியின் மெரினா நீச்சல் குளம்
புதுப்பொலிவு பெரும் மாநகராட்சியின் மெரினா நீச்சல் குளம்
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநகராட்சியில் மெரினா நீச்சல் குளம் இன்னும் ஒரு வாரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் கூறியுள்ளார்.

சென்னை மாநகராட்சி பராமரிப்பில் மெரினா மற்றும் பெரியமேடு மை லேடி பூங்கா ஆகிய இடங்களில் நீச்சல் குளங்கள் உள்ளன. இவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு தனியாரிடம் வழங்கப்பட்டு வந்தது. இங்கு கட்டண அடிப்படையில் பொதுமக்கள் நீச்சல் அடிக்க அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதனிடையே, நீச்சல் குளங்களை தனியார் முறையாக பராமரிக்கவில்லை, கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர் என புகார்கள் எழுந்தன.

கடந்த ஆண்டு நீச்சல் குள பணியாளரின் கவனக்குறைவால் மை லேடி பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி 8 வயது சிறுவன் உயிரிழந்தான். அதனைத் தொடர்ந்து, இந்த நீச்சல் குளங்களில் பொதுமக்கள் நீச்சலடிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால் மெரினாவில் உள்ள நீச்சல் குளம் பராமரிப்பின்றி கிடந்தது. அண்மையில் மெரினா கடற்கரையை தூய்மைப் படுத்தும் இயந்திரங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி மெரினாவில் நடைபெற்றது.

அந்நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை பார்வையிட வந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மெரினா நீச்சல் குளத்தை பார்வையிட்டார். அதை உடனே சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து சீரமைப்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் கூறியதாவது: மெரினா நீச்சல் குளத்தில், சுத்தமான தண்ணீர் தடையின்றி வருவதற்கான ஏற்பாடுகள், நீச்சல் குளம் அதனைச் சுற்றிலும் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள், நீச்சல் பயிற்சி மேற்கொள்வோருக்கான வசதிகள், கழிவறை, உடை மாற்றும் அறைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், புதிதாக கண்கவர் ஓவியங்கள் மற்றும் சுவர்களுக்கு வர்ணம் பூசுதல், கூடுதல் மின் விளக்கு வசதி, குடிநீர் வசதி, நீச்சல் குளநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்புப் பணிகள், பயனாளர்களுக்குத் தேவையான இதர வசதிகளை ஏற்படுத்தும் பணிகள், சிசிடிவி கேமராக்களை நிறுவுவது போன்ற பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் முடிவுற்று, இன்னும் ஒரு வாரத்தில் நீச்சல் குளம் பயன்பாட்டுக்கு வரும். மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக இயக்கி, பராமரிக்கும். இவ்வாற் அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in