

உதகை: கோடை விழாவின் ஆரம்பமாக, உதகையில் குதிரைப் பந்தயங்கள் நாளை (ஏப். 6) தொடங்குகின்றன. பரிசுத் தொகையாக ரூ.7.47 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை சீசனின்போது நீலகிரிமாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவர பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கி, ஜூன் மாதம் வரை மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் உதகையில் குதிரைப் பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.
நடப்பாண்டு 137-வது குதிரைப் பந்தயம் நாளை (ஏப். 6) தொடங்கி ஜூன் மாதம் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்காக பெங்களூரு, சென்னை, புனே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500 பந்தயக் குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மெட்ராஸ் ரேஸ்கிளப் நிர்வாகிகள் கூறும்போது, ‘‘ஆண்டுதோறும் மெட்ராஸ் ரேஸ்கிளப் சார்பில் உதகையில் குதிரைப்பந்தயங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு ஏப். 6-ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 2-ம் தேதி வரை 17 நாட்கள் குதிரைப் பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. 500 குதிரைகள் போட்டியில் கலந்துகொள்கின்றன.
16 குதிரை பயிற்சியாளர்கள் மற்றும் 25 ஜாக்கிகள் கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டு கோப்பைகள் மற்றும் பரிசுத் தொகையாக ரூ.7.47 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. பந்தயங்கள் வார இறுதிநாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும். முக்கியப் பந்தயங்களான ‘தி நீல்கிரிஸ் 1000 கீனிஸ் கிரேட் 3’ ஏப்ரல் 20-ம் தேதியும், ‘தி நீல்கிரிஸ் 2000 கீனிஸ் கிரேட் 3’ போட்டி ஏப்ரல் 2-ம் தேதியும், ‘தி நீல்கிரிஸ் டர்பி ஸ்டேக்ஸ்’ கிரேட் 1 போட்டிகள் மே மாதம் 12-ம் தேதி நடக்கின்றன.
‘நீலகிரி தங்க கோப்பை’ மற்றும் டாக்டர் எம்ஏஎம் ராமசாமி நினைவுக் கோப்பை போட்டிகள் மே 26-ம் தேதி நடத்தப்படுகின்றன. ஊட்டி ஜூவைனல் ஸ்பிரின்ட் கோப்பை மே 25-ம் தேதி நடத்தப்படுகிறது’ என்றனர்.