ஆன்மிக, சுற்றுலா தலங்களை இணைக்க தனுஷ்கோடியில் விரைவில் ஹெலிகாப்டர் இறங்குதளம்!

ஆன்மிக, சுற்றுலா தலங்களை இணைக்க தனுஷ்கோடியில் விரைவில் ஹெலிகாப்டர் இறங்குதளம்!
Updated on
1 min read

ராமேசுவரம்: தமிழகத்தின் ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில், தனுஷ்கோடியில் விரைவில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்பட உள்ளதாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலகின் பல்வேறு இடங்களில் இருந்து ராமேசுவரத் துக்கு ஆண்டுக்கு சுமார் 4 கோடிக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் மதுரை மற்றும் திருச்சி மார்க்கமாக பேருந்து மற்றும் ரயிலில் வருகின்றனர். ராமேசுவரத்துக்கு விமானம் மூலம் யாத்திரை மற்றும் சுற்றுலா வருவோர் மதுரை வரை வந்து பின்னர் 170 கி.மீ தொலைவை மூன்றரை மணிநேரம் கார் அல்லது இதர வாகனங்களில் பயணம் செய்து வரவேண்டியுள்ளது. இதனால் பெருமளவில் நேர விரயம் ஏற்படுகிறது. எனவே, ராமேசுவரத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என்பது சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் வேண்டுகோளாக இருந்து வந்தது.

கடந்த ஏப்ரலில் தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு நகரங்களுக்கு இடையேயான வான்வெளிப் பயணத்துக்கு ஹெலிகாப்டர்களை பயன்படுத்த உதவும் வகையில் தமிழ்நாட்டில் விரை வில் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்படும், என அறிவித்திருந்தார்.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறியதாவது: ராமேசுவரம் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ராமேசுவரம்-தனுஷ்கோடி நெடுஞ்சாலை நடராஜபுரத்தில் 13.15 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான அனுமதி ஒப்புதலுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசு நிதி ஒதுங்கியதும் விரைவில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கும் பணிகள் தொடங்கும். இதன் மூலம் ராமேசுவரத்துக்கு அருகே உள்ள மதுரை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய விமான நிலையம் உள்ள நகரங்கள் மற்றும் தமிழகத்தின் முக்கிய ஆன்மிக மற்றும் சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில், ராமேசுவரத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை தொடங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in