Published : 14 Sep 2023 04:56 PM
Last Updated : 14 Sep 2023 04:56 PM

பாணதீர்த்தம் அருவியை இனி காரில் இருந்து பார்க்கலாம்: படகு பயணம், குளிப்பதற்கு அனுமதியில்லை!

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அணைக்குமேல் அமைந்துள்ள பாணதீர்த்தம் அருவியை 9 ஆண்டுகளுக்குப்பின் சுற்றுலா பயணிகள் பார்வையிட வரும் 18-ம் தேதி முதல் வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

பிரசித்திபெற்ற இந்த அருவியில் குளிக்க கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப் பட்டிருந்தனர். இதற்காக பாபநாசம் அணையிலிருந்து தனியார் படகுகளும் அனுமதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களைத் தெரிவித்து இந்த அருவிக்கு செல்ல வனத்துறை அனுமதி மறுத்தது.

இந்நிலையில் வரும் 18-ம் தேதி முதல் பாணதீர்த்தம் அருவியை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் செண்பகப்பிரியா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை: பாணதீர்த்தம் அருவியை வரும் 18-ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் காணலாம். முண்டந்துறையில் இருந்து வனத்துறை ஏற்பாடு செய்யும் காரில் நபர் ஒன்றுக்கு ரூ. 500 கட்டணம் வசூலிக்கப்படும். காரில் இருந்தபடியே பாணதீர்த்த அருவியை பார்க்கலாம். படகில் செல்லவோ, அருவியில் குளிக்கவோ அனுமதி இல்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கட்டணம் வசூலிக்க பாஜக எதிர்ப்பு: இதனிடையே பாணதீர்த்தம் அருவியை பார்வையிட ரூ.500 கட்டணம் விதிக்கப்பட்டதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக செயலர் எம்.தங்கேஸ்வரன் கூறியதாவது: வனத்துறை ஏற்பாடு செய்யும் வாகனத்தில் சென்று பாணதீர்த்தம் அருவியைப் பார்க்க ரூ. 500 கட்டணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாமரனின் சுற்றுலாத் தலமாக விளங்கிய காரையாறு, சேர்வலாறு அணையை பொதுமக்கள் பார்வையிட, புலிகளின் இனப்பெருக்கம் தடைபட்டு விடும் என்று காரணத்தை சொல்லி கடந்த 9 ஆண்டுகளாக எவ்வித அரசாணை இல்லாமல், வனத்துறை தடுத்து வைத்துள்ளது. இப்போதும் பொதுமக்கள் தங்களது சொந்த வாகனத்தில் அல்லது அரசு பேருந்தில் சென்று அணைகளைப் பார்வையிட முடியாத நிலையுள்ளது.

சுற்றுலா பயணிகளை நம்பி கடைகள் நடத்திய 100 குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளன. அரசு பேருந்தில் பொதுமக்கள் மாஞ்சோலை செல்வதை தடுக்கும் வனத்துறை, பாணதீர்த்தம் அருவியை பார்வையிடும் திட்டத்தை அறிவித்தது ஏன்? காட்டை அடமானம் வைத்து பணம் சம்பாதிக்கவே ஆகும்.

ஏற்கெனவே கயல் பூங்கா, மணிமுத்தாறில் மின்சார படகு பயணம், லோயர் டேம் காட்சி முனை, மாஞ்சோலைக்கு அவர்கள் சொல்லும் வாகனத்தில் பயணிப்பது என்றெல்லாம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வனத்துறை தோல்வி கண்டுள்ளது. பாபநாசம், சேர்வலாறு அணைகளைப் பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். பாணதீர்த்தம் அருவிக்கு செல்ல இலவசமாக அனுமதிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x