Last Updated : 02 Sep, 2023 07:40 PM

 

Published : 02 Sep 2023 07:40 PM
Last Updated : 02 Sep 2023 07:40 PM

கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு -  சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

தேனி: கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் இன்று காலை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆகவே, பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. கொடைக்கானல் வனஉயிரின சரணாலயத்தில் அமைந்துள்ள இப்பகுதி தேவதானப்பட்டி வனச்சரகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. வட்டக்கானல், கொடைக்கானல் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் இங்கு அருவியாக கொட்டுகிறது.

காலை 8 முதல் மாலை 4 மணி வரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக பெரியவர்களுக்கு ரூ.30, குழந்தைகளுக்கு 20 ரூபாய் கட்டணம் பெறப்படுகிறது. கடந்த ஒருவாரத்திற்கு மேலாக நீர்வரத்து சீராக இருந்ததால் சுற்றுலாப் பயணிகள் இங்கு குளித்து வந்தனர்.இந்நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த கனமழையினால் கும்பக்கரை அருவியில் இன்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆகவே பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இதுகுறித்து வனச்சரகர் டேவிட்ராஜன் கூறுகையில், “காலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆகவே மறுஉத்தரவு வரும் வரை அருவியில் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றார். இதனால் அருவியில் குளிக்க ஆர்வத்துடன் வந்திருந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x