

புதுச்சேரி: புதுவையில் படகு கவிழ்ந்ததன் எதிரொலியாக, சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சுற்றுலா நகரமான புதுவையில் பல்வேறு சுற்றுலா தொழில்கள் புதிதாக உருவெடுத்து வருகின்றன. புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகில் கடலுக்குள் சென்று, உலா வருவதை பெரிதும் விரும்புகின்றனர். அரசிடம் அனுமதி பெறாமலும், போதிய பாதுகாப்பு வசதியின்றியும் வெளிமாநில சுற்றுலா பயணிகளை படகுகளில் கடலுக்குள் அழைத்துச் செல்கின்றனர்.
10-க்கும் மேற்பட்ட தனியார் படகு உரிமையாளர்கள் இந்த படகு சவாரியை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சமீபத்தில் கடலுக்குள் சென்று கரைக்கு திரும்பிய படகு ஒன்று கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த பயணிகள் தண்ணீரில் விழுந்தனர். இதில் 2 பேர் காயமடைந்தனர். ஆழமான பகுதியாக இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அரசு அனுமதி பெறாமல் படகுகளை இயக்க, புதுச்சேரி அரசு தடை விதித்துள்ளது. குறிப்பாக, பாண்டி மெரீனாவை ஒட்டியுள்ள துறைமுக முகத்துவார பகுதியில் உள்ள தனியார் படகு நிறுவனங்கள் படகுகளை இயக்க நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலோர பாதுகாப்பு படையினர் இதை கண்காணித்து வருகின்றனர்.