கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டம்: சுற்றுலா பயணிகளுக்கு தடை

கொடைக்கானல் பேரிஜம் ஏரிப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள்.
கொடைக்கானல் பேரிஜம் ஏரிப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள்.
Updated on
1 min read

கொடைக்கானல்: கொடைக்கானல் பேரிஜம் ஏரிப்பகுதியில் யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் பேரிஜம் ஏரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளது. இதனால் வனத்துறையினரிடம் அனுமதி பெற்ற பிறகே சுற்றுலாப் பயணிகள் ஏரிக்கு செல்ல முடியும்.

பேரிஜம் ஏரிக்குச் செல்லும் வழியில் தொப்பி தூக்கிப் பாறை, மதிகெட்டான் சோலை, வியூ பாய்ன்ட், அமைதிப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களைப் பார்க்கலாம்.

நேற்று அதிகாலை முதல் பேரிஜம் ஏரிப் பகுதிகளில் 4 யானைகள் குட்டிகளுடன் சுற்றித் திரிகின்றன. அதனால் பாதுகாப்புக் கருதி சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்வதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. வார விடுமுறை நாளான நேற்று பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது.

யானைகள் நடமாட்டம் காரணமாக பேரிஜம் ஏரிக்குச் செல்லத் தடை விதித்ததால், நீண்ட நேரம் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, `யானைகளின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். யானைகள் பேரிஜம் பகுதியை விட்டு இடம் பெயர்ந்ததும் வழக்கம்போல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர்' என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in