பாரத் கவுரவ் சிறப்பு ரயிலில் ஹரிதுவார், ரிஷிகேஷ், காசி சுற்றுலா

பாரத் கவுரவ் சிறப்பு ரயிலில் ஹரிதுவார், ரிஷிகேஷ், காசி சுற்றுலா
Updated on
1 min read

கோவை: பாரத் கவுரவ் சிறப்பு ரயில் மூலம் ஹரிதுவார், ரிஷிகேஷ், காசி சுற்றுலா செல்ல கோவையில் உள்ள இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) அலுவலகத்தில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐ.ஆர்.சி.டி.சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஐ.ஆர்.சி.டி.சி-யானது ரயில், விமானம் மூலம் பல்வேறு சுற்றுலாக்களை ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில், வரும் ஜூலை 20-ம் தேதி பாரத் கவுரவ் சிறப்பு சுற்றுலா ரயில் ‘புண்ணிய தீர்த்த யாத்திரை’ என்ற பெயரில் கொச்சுவேலியில் இருந்து புறப்பட்டு பாலக்காடு, போத்தனூர், ஈரோடு, சேலம் ரயில் நிலையங்கள் வழியாக செல்லும்.

இதன் மூலம் உஜ்ஜைனி, மகா காலேஸ்வர், ஓம் காரேஸ்வர், ஹரிதுவார், ரிஷிகேஷ், காசி, சாரநாத், அயோத்தியா, ப்ரயாக் ராஜ் போன்ற இடங்களில் உள்ள சிறப்பு மிக்க சுற்றுலா தலங்களை கண்டு மகிழ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

11 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு, குளிர்சாதன வசதி இல்லாத படுக்கை வசதிகொண்ட பெட்டியில் பயணிக்க ரூ.24,340, மூன்றாம் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் பயணிக்க ரூ.36,340 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், ரயில் கட்டணம், தங்கும் வசதி, உள்ளூர் போக்குவரத்து, தென்னிந்திய உணவு, சுற்றுலா மேலாளர், தனியார் பாதுகாவலர் வசதி, ஜிஎஸ்டி ஆகியவை அடங்கும்.

மத்திய, மாநில அரசு ஊழியர்கள் எல்டிசி சலுகைகளை பெறலாம். இந்த சுற்றுலா தொடர்பான கூடுதல் விவரங்கள் பெறவும், முன்பதிவுக்கும் ஐ.ஆர்.சி.டி.சி. கோவை அலுவலகத்தை 90031 40655 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.irctctourism.comஎன்ற இணையதளத்தில் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in