Published : 17 Dec 2021 03:07 AM
Last Updated : 17 Dec 2021 03:07 AM

செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு கரோனா : கோவை மருத்துவமனையில் அனுமதி

தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக தேர்வாகி, தற்போது தமிழக செய்தித் துறை அமைச்சராக மு.பெ.சாமிநாதன் (57) உள்ளார். இவரது நேர்முக உதவியாளர் செல்லமுத்து. இவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சருடன் தொடர்ந்து பங்கேற்று வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு செல்லமுத்துவுக்கு சளி, காய்ச்சல் இருந்தது. பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

அமைச்சருடன் நேரடி அலுவலகத் தொடர்பில் இருந்ததால், கடந்த 14-ம் தேதி இரவு அமைச்சர் மு.பெ.சாமிநாதனும் பரிசோதனை மேற்கொண்டார். அவருக்கும் கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அவர் அனுமதிக்கப்பட்டார். அமைச்சரின் பிற உதவியாளர்கள், அலுவலகத்தில் இருந்தவர்கள் மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்டோருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் யாருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, 2 தவணை தடுப்பூசிகளையும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செலுத்தி இருந்தார். தற்போது, நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x