Published : 17 Dec 2021 03:07 AM
Last Updated : 17 Dec 2021 03:07 AM

வேலூர் நகைக்கடை திருட்டு வழக்கில் 8 தனிப்படை அமைப்பு : வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார் தகவல்

வேலூரில் பிரபல நகைக்கடையில் நடைபெற்ற திருட்டு வழக்கில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல ஐ.ஜி.சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார். வழக்கு தொடர்பாக கர்நாடகா, தெலங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு தனிப்படையினர் விரைந்துஉள்ளனர்.

வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் பிரபல நகைக்கடை உள்ளது. இந்த கடையின் பின்புறம் ஏ.சி காற்று வெளியேறும் பகுதியை துளையிட்டு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு புகுந்த மர்ம நபர் ஒருவர் நகைகளை திருடிச் சென்றுள்ளார். போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கடையினுள் புகுந்த ஒல்லியான தேகத்துடன் இருக்கும் நபர் ஒருவர் சிங்கத்தின் முகமூடியுடன் விக் அணிந்துள்ளார். அவர் அனைத்து கண்காணிப்பு கேமராக்களிலும் ஸ்பிரே அடித்துவிட்டு, ஷோகேஸ்களில் இருந்த விலை உயர்ந்த நகைகளை திருடிக்கொண்டு தப்பியுள்ளார். லாக்கரை உடைக்க முடியாததால் அதிலிருந்த சுமார் 70 கிலோ தங்க நகைகள் தப்பியது தெரியவந்தது.

இதில், 15 கிலோ 900 கிராம் எடையுள்ள தங்க சங்கிலி, மோதிரம், வளையல்கள், நெக்லஸ்கள், கம்மல்கள் மற்றும் 819.865 கிராம் எடைஉள்ள வைர மோதிரங்கள், 53.758 கிராம் எடையுள்ள சிறிய வைர மோதிரங்கள், 240.358 கிராம் எடைஉள்ள வைர நெக்லஸ்கள், 100.577 கிராம் எடையுள்ள பிளாட்டினம் நகைகள் திருடுபோனது தெரியவந்தது. இது தொடர்பாக கடையின் மேலாளர் பிரதீஷ் அளித்த புகாரின்பேரில் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்தார்.

திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர் அருகில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் பகுதி வழியாக வந்து சென்றுள்ளார் என்பதால் அந்த பகுதியில் கிடைத்த மர்ம நபரின் கைவிரல் ரேகைகள் மற்றும் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட விக்கை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், நகைக்கடைகளில் துளையிட்டு திருடும் கும்பல்களின் பட்டியலை தயாரித்து விசாரித்து வருகின்றனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளில் பதிவான நபர் பெங்களூருவைச் சேர்ந்த பிரபல கொள்ளையனைப் போன்று இருப்பதால் அதுகுறித்து தனியாக விசாரித்து வருகின்றனர். தனிப்படையினர் கர்நாடகா, தெலங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர்.

ஐஜி ஆய்வு

இந்நிலையில், நகைக்கடையில் நேற்று ஆய்வு செய்த வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக 4 டிஎஸ்பிக்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருட்டில் ஈடுபட்ட நபர் குறித்துசில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. வீடியோ காட்சிகளின் அடிப்படையில் ஒருநபர் மட்டும் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதுபோல ஏற்கெனவே நடந்த சில திருட்டு சம்பவங்கள் குறித்தும், திருச்சியில் பிரபல நகைக்கடை திருட்டில் ஈடுபட்டவர்களின் விவரங்களையும் விசாரிக்கிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x