Published : 16 Dec 2021 03:06 AM
Last Updated : 16 Dec 2021 03:06 AM

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு உட்பட - சென்னையில் 14 இடங்களில் சோதனை :

முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன் தொடர்புடைய உறவினர்கள், நண்பர்களுக்கு சொந்தமான இடங்களில் ஒன்றான சென்னை அரும்பாக்கம் ஈ.வெ.ரா.பெரியார் சாலையில் உள்ள பிளைவுட் நிறுவனத்தில் நேற்று சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார்.படம்: ம.பிரபு

சென்னை

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் தொடர்புடைய 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

சேப்பாக்கம் எம்எல்ஏக்கள் விடுதியில் உள்ள தங்கமணியின் அறை, கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள பண்ணை வீடு, கீழ்ப்பாக்கம் ராஜரத்தினம் சாலையில் உள்ளவி.சத்தியமூர்த்தி அன்கோ, பட்டினப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் கே.சிவசுப்பிரமணியன் வீடு, அண்ணா நகரில் உள்ள சசிரேகா இல்லம், நுங்கம்பாக்கம் மோகன் குமாரமங்கலம் தெருவில் உள்ள பி.எஸ்.டி. என்ஜினீயரிங் கட்டுமான நிறுவனம், மதுரவாயல் திருகுமரன் நகரில்உள்ள தருண் கட்டுமான நிறுவனம், எழும்பூர் காஜாமைதீன் சாலையில் உள்ள ஆனந்த வடிவேல் வீடு, டிராவல்ஸ் நிறுவனரான விசாலாட்சி வீடு, அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில்உள்ள கட்டுமான நிறுவனம்,அரும்பாக்கம் ஈ.வி.ஆர். பெரியார் சாலையில் உள்ள பிளைவுட்நிறுவனம், கோயம்பேட்டில் தென் ஆசியா விளையாட்டு கிராமத்தில் உள்ள ஜனார்த்தனன் வீடு, சென்னை வெங்கட் நாராயண ரோடு சுவாதி காம்ப்ளக்சில் உள்ளகனிமவள நிறுவனம், சென்னை ஷெனாய் நகரில் உள்ள வெங்கடாசலத்தின் வீடு ஆகிய 14 இடங்களில் சோதனை நடைபெற்றது.

எஃப்ஐஆர் விவரம்

தங்கமணியின் மகன் தரணிதரன் பெயரில் `முருகன் எர்த் மூவர்ஸ்' என்ற நிறுவனம் இயங்கி வருவதாக கணக்கு காட்டியிருந்த நிலையில், பெயரளவில் மட்டுமே அப்படி ஒரு நிறுவனம் இயங்கி வருவதாக பதிவுசெய்து, முறைகேடாக வரும் வருமானத்தை மறைத் துள்ளனர்.

மனைவி சாந்தி பெயரில் எவ்வித தொழிலும் நடைபெற வில்லை என முன்னாள் அமைச்சர் தங்கமணி தனது சொத்துவிவர அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் பெயரில் கோடிக்கணக்கில் சொத்து உள்ளது. குறிப்பாக, 2016-ல்வேட்புமனு தாக்கல் செய்யும்போது, முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோர் பெயரில் உள்ள சொத்து மதிப்புரூ.1 கோடியே 1 லட்சத்து 86 ஆயிரத்து 17 எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 2021-ம் ஆண்டு வேட்புமனு தாக்கலில் இணைத்து காட்டப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.8 கோடியே 47 லட்சத்து 66 ஆயிரத்து 318.

2016 முதல் 2021-ம் ஆண்டு வரை முன்னாள் அமைச்சர் தங்கமணி மனைவி சாந்தி மற்றும் மகன் தரணிதரன் ஆகியோரின் வருமானம் ரூ.5 கோடியே 24 லட்சத்து 86 ஆயிரத்து 617. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.7 கோடியே 45 லட்சத்து 80 ஆயிரத்து 301 மதிப்புள்ள சொத்துகள் அதிகமாகியுள்ளன. இதில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.4 கோடியே 85 லட்சத்து 72 ஆயிரத்து 19 சொத்து சேர்ந்துள்ளது.

தங்கமணியின் மருமகன் தினேஷ்குமார் மான்ட்ரோ நெட்வொர்க் என்ற பெயரில் தனியார் சேனலின் இயக்குநராக இருக்கிறார். மேலும், மெட்ராஸ் ரோட் லைன், ஜெய செராமிக், பிளை அண்ட் வணீர், ஏ.ஜி.எஸ். டிரான்ஸ் மூவர், ஸ்மார்ட் ட்ரேட் லிங்ஸ், ஸ்மார்ட் டெக்மற்றும்  பிளைவுட், இன்ப்ராப்ளூ மெட்டல் ஆகிய நிறுவனங்களிலும் பங்குதாரராக இருந்து வருவது தெரியவந்துள்ளது.

தினேஷ் குமாரின் தந்தை சிவசுப்பிரமணியன் பெயரில் எம்.ஆர்.எல். லாஜிஸ்டிக்ஸ் என்ற பெயரில் நூற்றுக்கணக் கான லாரிகள் இயங்கி வருகின்றன. தங்கமணியின் மகள்லதா பெயரில் ஜெய பிளைவுட் மற்றும் ஜெய பில்ட் புரோஎன்ற நிறுவனங்கள் நாமக்கல் பள்ளிபாளையத்தில் செயல் பட்டு வருகின்றன. பினாமி பெயரில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருவதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5-வது அமைச்சர்

முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்ட நிலை யில், முன்னாள் அமைச்சரான தங்கமணிக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x