Published : 15 Dec 2021 03:07 AM
Last Updated : 15 Dec 2021 03:07 AM

எல்ஐசி நிறுவனம் சார்பில் - ‘தன் ரேகா’ ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகம் :

சென்னை

இந்திய ஆயுள் காப்பீடு கழகம் (எல்ஐசி) ‘தன் ரேகா’ என்ற புதிய திட்டத்தை நேற்று முன்தினம் (டிச.13) அறிமுகப்படுத்தியுள்ளது. இது பங்குச் சந்தையுடன் இணைக்கப்படாத, தனிநபர் சேமிப்பு ஆயுள் காப்பீடு திட்டமாகும்.

இதில் பல தனித்துவமான அம்சங்கள் உள்ளன. பெண்களுக்கு சிறப்பு பிரீமியம் விகிதம்உண்டு. மூன்றாம் பாலினத்தவர்களும் இந்த திட்டத்தில் சேரமுடியும். இதில் உள்ள அனைத்துபயன்களும் முற்றிலும் உத்தரவாதமானதாகும்.

இந்த திட்டம் நடைமுறையில் உள்ள பிரீமியம் செலுத்தும் காலத்தின் முடிவில் இருந்து வழக்கமான இடைவெளியில் உயிர்வாழும் நன்மைக்கான அடிப்படைத் தொகையின் சதவீதத்தை வழங்குகிறது. முதிர்வு நாளில் முழு முதிர்வு தொகையும் எந்தவித பிடித்தமும் இல்லாமல் வழங்கப்படுவது பாலிசியின் சிறப்பு அம்சம். இதில் ஒற்றை பிரீமியம் அல்லது 10 ஆண்டுகள், 15 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் வரையறுக்கப்பட்ட பிரீமியம் செலுத்தும் வசதி உண்டு.

பணத் தேவைகளுக்காக இந்தத் திட்டத்தின் மூலம் கடன் பெற முடியும். இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.2 லட்சம் மற்றும் அதிகபட்ச தொகைக்கு வரம்பு இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட பாலிசி காலத்தின்படி இத்திட்டத்தில் சேர குறைந்தபட்ச வயது 90 நாட்களிலிருந்து 8 ஆண்டுகள், அதிகபட்ச வயது 35 முதல் 55 ஆண்டுகளாக இருக்கும்.

பொது சேவை மையங்கள், முகவர்கள் மூலம் இத்திட்டத்தில் சேரலாம். அல்லது www.licindia.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் நேரடியாக இந்த திட்டத்தில் சேர முடியும்.

இவ்வாறு எல்ஐசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x