நெல்லையில் கார் டயர் வெடித்து மொபட் மீது மோதியது - மருத்துவ மாணவிகள் உட்பட 3 பேர் மரணம் :

பிரிடா ஏஞ்சலின் ராணி
பிரிடா ஏஞ்சலின் ராணி
Updated on
1 min read

திருநெல்வேலியில் கார் டயர் வெடித்து மொபட் மீது மோதியதில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகள் இருவர் உட்பட 3 பேர் உயிர்இழந்தனர்.

திருநெல்வேலி அரசு மருத்துவகல்லூரி இறுதியாண்டு மாணவிகளான திவ்ய பாலா(22), பிரிடா ஏஞ்சலின் ராணி(22), பொன். திவ்ய காயத்ரி(22) ஆகியோர், நேற்று ரெட்டியார்பட்டி நான்குவழிச் சாலையில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு மொபட்டில் சென்றனர். ரெட்டியார்பட்டி மலையடிவாரம் அருகே நான்குவழிச் சாலையில் சென்றபோது, எதிரே கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் இருந்து வந்த காரின் முன்பக்க டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் மறுபக்கம் மொபெட்டில் சென்ற மாணவிகள் மீது மோதி கவிழ்ந்தது.

இதில் 3 மாணவிகளும் தூக்கிவீசப்பட்டனர். பிரிடா ஏஞ்சலின் ராணி, பொன். திவ்ய காயத்ரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிர்இழந்தனர். மாணவி திவ்ய பாலா, காரை ஓட்டிவந்த சுசீந்திரத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (45), காரில் இருந்த கோட்டாறைச் சேர்ந்த பூ வியாபாரி சண்முகசுந்தரம்(41), தேரூரைச் சேர்ந்த பெருமாள்(40) ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகசுந்தரம் உயிரிழந்தார்.

திருநெல்வேலி மாநகர காவல்துணை ஆணையர் சுரேஷ்குமார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார்.

விபத்தில் உயிரிழந்த மாணவி பொன்.திவ்ய காயத்ரி தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேஆவுடையானூரையும், பிரிடா ஏஞ்சலின் ராணி மதுரையையும், சிகிச்சைபெறும் திவ்ய பாலா தென்காசி மாவட்டம் கடையநல்லூரையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in