சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை தந்ததாக புகார் - பெண் எஸ்பி கணவருடன் நேரில் ஆஜராக நடுவர் உத்தரவு :

சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை தந்ததாக புகார்   -  பெண் எஸ்பி கணவருடன் நேரில் ஆஜராக நடுவர் உத்தரவு  :
Updated on
1 min read

தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக பணியாற்றி வந்தவர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கடந்த ஏப்ரல் மாதம் பெண் எஸ்பி ஒருவர் புகார் அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து, சிறப்பு டிஜிபி, அவருக்கு உதவிய செங்கல்பட்டு எஸ்பி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, இந்த பாலியல் புகார் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று இவ்வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்பி ஆகியோர் ஆஜராயினர். பெண் எஸ்பி கூறியுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து இருவரிடமும் பல்வேறு கேள்விகளை எழுப்பி, அவர்கள் அளித்த பதில்களை நடுவர் கோபிநாதன் பதிவு செய்தார்.

அப்போது, தன்னை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்ட, அப்போதைய மாநில உள்துறைச் செயலரிடம் முதலில் விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் எஸ்பி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு, முதலில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட புகார் கூறிய பெண் எஸ்பியிடம் விசாரணை நடத்த வேண்டும் என வாதம் செய்தது.

முன்னாள் எஸ்பி தரப்பு வைத்த கோரிக்கையை நிராகரித்த நடுவர் கோபிநாதன், புகார் அளித்த பெண் எஸ்பி மற்றும் அவரது கணவரிடம் முதலில் விசாரணை நடத்த அனுமதி அளித்தார். அவர்கள் இருவரும் நாளை மறுநாள் (நவ.11) நேரில் ஆஜராக உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in