Published : 23 Oct 2021 03:06 AM
Last Updated : 23 Oct 2021 03:06 AM

ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் தள்ளிவைப்பு - தேர்தல் அலுவலர் காரை முற்றுகையிட்டு போராட்டம் : எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் கைது

கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவராக இருந்தவர்என்.முத்துக்குமார் (அதிமுக). இவர் ராஜினாமா செய்துவிட்டு, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதையடுத்து, மாவட்ட ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அக்.9-ல் நடந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட முத்துக்குமார் தோல்வியடைந்தார்.

இந்நிலையில், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல், மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நேற்றுமதியம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் மாவட்ட ஊராட்சி அலுவலகத்துக்கு வந்திருந்தனர். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் காத்திருந்தனர்.

இந்நிலையில் தேர்தல் அலுவலரான மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மந்திராசலம், இத்தேர்தலை தள்ளிவைப்பதாகக் கூறிவிட்டு, காரில் புறப்பட முயன்றார். இதையடுத்து, எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டஅதிமுகவினர் தேர்தல் அலுவலரின் காரை முற்றுகையிட்டனர். போலீஸாரிடமும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அதிமுகவினர் மற்றும் போலீஸாரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன் உள்ளிட்ட அதிமுகவினர் 50 பேரை தாந்தோணிமலை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x