Published : 22 Oct 2021 03:06 AM
Last Updated : 22 Oct 2021 03:06 AM

கோட்டைப்பட்டினத்தில் 2-வது நாளாக மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் :

புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து அக்.18-ம் தேதி எஸ்.சவுந்தரராஜன் என்பவருக்கு சொந்தமான படகில் ராஜ்கிரண்(30), சுகந்தன்(30), சேவியர்(32) ஆகிய 3 பேரும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். 19-ம் தேதி சுமார் 17 நாட்டிக்கல் மைல்தொலைவில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ரோந்து கப்பல் மூலம் மீனவர்களின் படகை இடித்ததில் படகு பழுதாகி நடுக்கடலில் மூழ்கியது.

கடலில் தத்தளித்த 3 மீனவர்களில் சுகந்தன் மற்றும் சேவியர் ஆகிய 2 பேரை இடங்கை கடற்படையினர் மீட்டு, காங்கேசன்துறை கடற்படை தளத்தில் ஒப்படைத்தனர். மாயமான ராஜ்கிரணை நேற்று முன்தினம் இலங்கை கடற்படை சடலமாக மீட்டது. இலங்கை கடற்படையின் இத்தகைய செயலைக் கண்டித்தும், இறந்த மீனவர் ராஜ்கிரணின் உடல் மற்றும் சிறை பிடிக்கப்பட்டுள்ள 2 மீனவர்களையும் உடனே ஒப்படைக்க வேண்டும். ராஜ்கிரணின் குடும்பத்தினருக்கு ரூ.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். மூழ்கடிக்கப்பட்ட படகுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் தொடராமல் இருப்பதை எழுத்துப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி,கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் தங்களது குடும்பத்தினருடன் 2-வது நாளாக நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜ்கிரணின் மனைவி பிருந்தா(25), தாய் ஆரவள்ளி உட்பட 300-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

இதனால், கோட்டைப்பட்டினம் விசைப் படகு மீன்பிடி இறங்கு தளத்தில் சுமார் 280 விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இப்போராட்டத்தை ஆதரித்துராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி, கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ எம்.சின்னதுரை மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x