Published : 14 Oct 2021 05:55 AM
Last Updated : 14 Oct 2021 05:55 AM

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் - மூன்றாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் வெற்றி : மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 3-வது பெரிய கட்சியாக காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. 74 ஊராட்சி ஒன்றியங்களில் 73-லும், 140 மாவட்ட ஊராட்சிகளில் 138-லும் திமுக கூட்டணி வெற்றி கிடைத்துள்ளது. அதேபோல, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் தேர்தலிலும் பெரும்பான்மையான இடங்களில் இக்கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.

கடந்த 5 மாதங்களாக தமிழகத்தில் நடைபெற்று வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு நற்சான்றிதழை இத்தேர்தல் வெற்றி மூலம் மக்கள் வழங்கியிருக்கிறார்கள். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. அதேநேரத்தில், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, தேமுதிக ஆகிய கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத அளவுக்கு படுதோல்வியை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். அதேபோல, சந்தர்ப்பவாத கூட்டணியாக செயல்படுகிற பாஜக, பாமகவுக்கும் மக்கள் பாடம் புகட்டியிருக்கிறார்கள்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மூலமாக தமிழகம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் தடையின்றி பயணம் செய்வதற்கான வாய்ப்பு அமைந்திருக்கிறது. இதன்மூலம் தமிழகத்துக்கு ஒளிமயமான எதிர்காலத்தை அமைக்கிற பணியில் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து செயல்படுவார் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x