Published : 13 Oct 2021 05:49 AM
Last Updated : 13 Oct 2021 05:49 AM

அரசு, தனியார் பங்களிப்பில் திருவள்ளூரில் - ரூ.1,200 கோடியில் சரக்கு போக்குவரத்து பூங்கா : முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் ஒப்பந்தம்

திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில், ரூ.1,200 கோடியிலான பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காவுக்கான ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் மற்றும் நிதின் கட்கரி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் கையெழுத்தானது.

தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் தேசியநெடுஞ்சாலை சரக்கு மேலாண்மை நிறுவனம், சென்னை துறைமுகம் ஆகியவை இணைந்து பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில், ரூ.1,200 கோடி முதலீட்டில், ‘பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா’வை தொடங்குகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த முதல்வர் ஸ்டாலின்,டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக பங்கேற்ற மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, கப்பல் போக்குவரத்து அமைச்சர் சர்வானந்த சோனோவால், நெடுஞ்சாலைத் துறைஇணை அமைச்சர் வி.கே.சிங் முன்னிலையில் கையெழுத்தானது.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில்158 ஏக்கர் பரப்பில் ரூ.1,200 கோடிதிட்ட மதிப்பில் இந்த பூங்காஅமைக்கப்படுகிறது. இது அமையும் பகுதி மிக முக்கியமான தொழில்பகுதி. பெரிய தொழிற்சாலைகள் திரளாக அமைந்துள்ள பெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், ஒரகடம்ஆகியபகுதிகளுக்கு மிக அருகில் இந்த பூங்கா அமைய உள்ளது.

உலகத் தரம் வாய்ந்த வசதிகள்

இப்பூங்கா சென்னை எல்லை சுற்றுவட்டச் சாலைக்கு மிக அருகில் உள்ளது. சென்னை விமான நிலையம், சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகம் ஆகியவற்றை சிறப்பான முறையில் இணைக்க வழி செய்கிறது. அனைத்து வசதிகளும் கொண்ட இடத்தில் அமையும்இப்பூங்காவில், உலகத் தரம் வாய்ந்த வசதிகளும் உள்ளன.

ரயில் மற்றும் சாலை இணைப்புகளுடன் சரக்கு முனையம், சேமிப்புக் கிடங்கு, குளிர்பதன சேமிப்புக்கிடங்கு, இயந்திரங்கள் மூலம் சரக்குகளை கையாளுதல், மதிப்புக் கூட்டப்பட்ட சேவைகளான சுங்க அனுமதி பெறுதல், சோதனை வசதிகள் போன்ற உலகத் தரம் வாய்ந்தவசதிகள் அனைத்தும் இப்பூங்காவில் அமைக்கப்பட இருப்பதை அறிந்து மகிழ்கிறேன்.

இதன்மூலம் சரக்கு போக்குவரத்துச் செலவு கணிசமான அளவில்குறையும். சரக்குப் போக்குவரத்து உட்கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை தொடங்கியுள்ளோம். சரக்கு போக்குவரத்து செலவை குறைக்கும் வகையில், ‘தமிழ்நாடு மாநில சரக்கு போக்குவரத்துக்கான திட்டத்தை தயாரிக்கும் முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கென டிட்கோ சார்பில் ஒரு ஆலோசகர் நியமிக்கப்பட்டு, திட்டத்தை விரைவில் வெளியிட உள்ளோம்.

இந்த புதுமையான முயற்சியின் காரணமாக தமிழகத்தில் உள்ள 10 ஆயிரம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இந்த தருணத்தில் தமிழகத்தில் சரக்கு போக்குவரத்து துறைக்கு உதவ வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு சில கோரிக்கைளை முன்வைக்கிறேன்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அமைக்கப்படும் பெங்களூரு - சென்னை விரைவுச்சாலையை சென்னை விமான நிலையம் வரை நீட்டிக்க வேண்டும்.

கோயம்புத்தூர், தூத்துக்குடியில் இதுபோன்ற பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காக்கள் அமைக்கப்பட வேண்டும். இதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு தரும்.

இப்பூங்காவில் ரயில்வே துறையின் பங்களிப்பையும் பெற்றுத்தரவேண்டும். திட்டத்தை தமிழகத்துக்கு வழங்கியதற்காக மத்தியஅமைச்சருக்கு நன்றி.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் இறையன்பு, தொழில் துறை செயலர் முருகானந்தம், சென்னை துறைமுகத்தின் தலைவர் சுனில் பாலிவால், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனதலைவர் பங்கஜ் குமார் பன்சல்,டிட்கோ செயல் இயக்குநர் வந்தனாகார்க், தேசிய நெடுஞ்சாலை சரக்குமேலாண்மை நிறுவனத்தின் செயல் அலுவலர் பிரகாஷ் கவுர், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சென்னை மண்டல அலுவலர்எஸ்.பி.சோமசேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x