Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM
விஜயதசமி நாளில் கோயில்களை திறக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த பொன்னுசாமி சார்பில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நவராத்திரி பண்டிகையின் முக்கிய நாளான விஜயதசமி வரும் 15-ம் தேதி(வெள்ளி) கொண்டாடப்படுகிறது.
சென்னை காசிமேடு துறைமுகத்தில் வழக்கம்போல மீன் விற்பனையை அனுமதிக்கும் தமிழக அரசு, வெள்ளிக்கிழமையில் துர்க்கையை வழிபடும் பெண் பக்தர்களின் மனதைப் புரிந்து கொள்ளாமல், கோயில்களைத் திறப்பதில் பிடிவாதம் காட்டுகிறது.
எனவே, விஜயதசமி நாளில்கோயில்களை திறக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
அத்துடன், வழிபாட்டுத் தலங்களுக்கான நிலையான வழிகாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி, கோயில்களை வழக்கம்போல பக்தர்களின் வழிபாட்டுக்காக திறக்க அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதேபோல, வழக்கறிஞர் பா.ராம்குமார் ஆதித்தன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம்போல அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க உத்தரவிட வேண்டும். ஆலயங்களில் விஐபி தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரியுள்ளார்.
நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அப்துல் குத்தூஸ் அமர்வில் இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT