Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM

முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக - யூ-டியூபர் சாட்டை துரைமுருகன் கைது :

தக்கலையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக யூ-டியூபர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து கனிமவளங்கள் கேரள மாநிலத்துக்கு கடத்தப்படுவதைக் கண்டித்தும், இவ்விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியும் நாம் தமிழர் கட்சி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அக்கட்சி நிர்வாகியான திருச்சியைச் சேர்ந்த யூ-டியூபர் சாட்டை துரைமுருகன் பேசும்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக கூறப்பட்டது.

இதுகுறித்து தக்கலை எஸ்.ஐ. ராஜசேகர் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து சாட்டை துரைமுருகன் மீது பொதுஅமைதிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசுதல் என்பன உட்பட 7 பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று விட்டு சாட்டை துரைமுருகன் காரில் புறப்பட்டுச் சென்ற நிலையில், நாங்குநேரி பகுதியில் அவரதுகாரை தடுத்து நிறுத்தி போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரைதக்கலைக்கு அழைத்து வந்து பத்மநாபபுரம் ஜுடிசியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 25-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சாட்டை துரைமுருகன் நாங்குநேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x