Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM

சில குடும்பங்களில் வாரிசுகளை ஊக்குவிக்கின்றனர் : விளாத்திகுளத்தில் வைகோ கருத்து

“சில குடும்பங்களில் திட்டமிட்டு வாரிசுகளை ஊக்குவிக்கின்றனர்” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

விளாத்திகுளம் அருகே சங்கரலிங்கபுரத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெங்களூருவில் போலீஸாக இருந்தவர். அதனால்தான் போலீஸ் எண்ணத்திலேயே பேசிக் கொண்டிருக்கிறார். கரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவுக்கே வழிகாட்டக் கூடிய அளவுக்கு தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக எனக்கே தெரியாமல் கட்சிக்காரர்கள் வீடுகளில் நடக்கும் சுக, துக்க நிகழ்ச்சிகளுக்கு எனது மகன் துரைவையாபுரி சென்று கொண்டிருந்தார். அவரது படத்தை சுவரொட்டிகளில் பயன்படுத்தக் கூடாது என்று கூறினேன்.

சமீபத்தில் நடந்த மாநாட்டுக்கு முந்தைய நாள் இரவு மாநாட்டு பந்தலுக்கு போய், அங்கு துரை வைகோ என்று போடப்பட்ட சுவரொட்டிகளை கிழிக்கச் சொன்னேன். இனி யாராவது இதில் ஈடுபட்டால் கட்சியை விட்டு நீக்குவேன் என எச்சரித்தேன். நான் அவரை ஊக்குவிக்கவே இல்லை. சில குடும்பங்களில் வாரிசுகளை ஊக்குவிக்கின்றனர். அவர்களை கொண்டு வந்து அமர வைக்க வேண்டும் என முதலில் இருந்தே திட்டமிட்டு செய்கின்றனர். நான் துரை வைகோவை ஊக்குவிக்கவில்லை.

‘நல்லதொரு வழிகாட்டி வேண்டும். அதற்கு அனைத்து தகுதியும் உடையவர் துரை வைகோ’ என என்னை மீறி தொண்டர்கள் அவரை அழைத்துக் கொண்டு போகிறார்கள். இதுதான் இன்றைக்கு உள்ள நிலைமை. இந்தக் கட்சி தொண்டர்களால் உருவாக்கப்பட்டது. என்னால் உருவாக்கப்பட்டதல்ல. தொண்டர்களின் விருப்பம் எதுவோ, அது ஜனநாயக முறையில் நிறைவேற்றப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x