Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM

உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ததைக் கண்டித்து பந்த் - புதுச்சேரியில் பெரும்பாலான கடைகள் அடைப்பு : அரசுப் பேருந்து, ஆட்டோ, பள்ளி, கல்லூரிகள் இயங்கின

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ததைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தினால் தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. முக்கிய கடைவீதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதே நேரத்தில் அரசுப் பேருந்துகள், ஆட்டோக்கள், பெரிய மார்க்கெட், உழவர் சந்தைகள், பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகள் வழக்கம்போல் இயங்கின.

புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல்அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடை ரத்து செய்து உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

கடந்த சனிக்கிழமையன்று சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தலைமையில் அனைத்துக் கட்சிஎம்எல்ஏக்கள் ஒன்றுகூடி பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளித்து தேர்தலை நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். அத்துடன் மாநிலத் தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி, ஆளுநர் தமிழிசையை நேரில் சந்தித்து தீர்மானங்களை அளித்தும் வலியுறுத்தினர்.

இதற்கிடையே எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் - திமுக கூட்டணிகட்சியினர் இடஒதுக்கீட்டை ரத்து செய்து, தேர்தலை நடத்துவதை கண்டித்து நேற்று பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதன்படி நேற்று காலை 6 மணிக்கு பந்த் தொடங்கியது. புதுச்சேரியில் பெரும்பான்மையாக இயங்கும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதேநேரத்தில் தமிழகம், புதுவை அரசுப்பேருந்துகள் இயங்கின.

புதிய பேருந்து நிலையம் தொடங்கி நகரின் முக்கியச் சாலைகள், சந்திப்புகளில் போலீஸார் அதிகளவில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். ஆட்டோ, டெம்போக்கள் இயங்கின. பள்ளி, கல்லூரிகள் இயங்கின. தனியார் பள்ளி, கல்லூரிகள் மாணவர்களை ஏற்றிச்செல்லும் பேருந்துகளை இயக்கினர்.

அரசுப் பள்ளிகள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் இயங்கின. பெரிய மார்க்கெட், உழவர் சந்தைகள் திறக்கப்பட்டிருந்தன. மீன் மார்க்கெட்டும் இயங்கியது. சேதராப்பட்டு, தட்டாஞ்சாவடி, மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகள் வழக்கம்போல இயங்கின. நேரு வீதி உட்பட நகரின் முக்கிய இடங்களில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன.

கட்சிகள் ஊர்வலம்

பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்த காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, புதியநீதிக் கட்சி மற்றும் இயக்கத்தினர் அண்ணா சிலை அருகே ஒன்றுகூடி காமராஜர் சிலைநோக்கி ஊர்வலமாக வந்தனர்.நேருவீதி சந்திப்பில் அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அங்கு மறியல் நடத்த முற்பட்டபோது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதை சுட்டிக்காட்டி மறியல் நடத்தக்கூடாது என போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து அவர்கள் இருசக்கர வாகனங்களில் பேருந்து நிலையம் வரை சென்றனர். செல்லும் வழியில் திறந்திருந்த கடைகளை மூடும்படி கோரிக்கை வைத்தனர். பின்னர் பேருந்து நிலையம் முன்பு ஒன்றுகூடி, இடஒதுக்கீடு ரத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, மாநில திமுக அமைப்பாளர் சிவா எம்எல்ஏ, அவைத் தலைவர் எஸ்பி.சிவக்குமார், எம்எல்ஏக்கள் அனிபால்கென்னடி, செந்தில்குமார், சம்பத், விடுதலை சிறுத்தைகள் தேவபொழிலன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

புதிய பேருந்து நிலையம் முன்பு மறியல் செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 60 பேர் கைது செய்யப்பட்டனர். பந்த் போராட்டத்தையொட்டி புதுச்சேரியின் முக்கிய சந்திப்புகளில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x