

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 17,665 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் மழை பெய்துவரும் நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 15,019 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 17,665 கனஅடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 750 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனிடையில், நீர்திறப்பை விட நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 77.67 அடியாக இருந்த நீர்மட்டம், ஒரேநாளில் 1.40 அடி உயர்ந்து நேற்று 79.07 அடியானது. நீர் இருப்பு 41.63 டிஎம்சியாக உள்ளது.