தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் இருந்து - கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை 30 மணிநேரத்தில் மீட்பு :

மீட்கப்பட்ட குழந்தையை தாயிடம் ஒப்படைக்கிறார் எஸ்பி ரவளிப்பிரியா.
மீட்கப்பட்ட குழந்தையை தாயிடம் ஒப்படைக்கிறார் எஸ்பி ரவளிப்பிரியா.
Updated on
1 min read

தஞ்சாவூர் பர்மா காலனியைச் சேர்ந்தவர் குணசேகரன்(24). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி(20). இருவரும் கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமி தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அக்.4-ம் தேதி சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு அக்.5-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை மருத்துவமனையில் ராஜலட்சுமி குளிக்க சென்றபோது, அக்குழந்தையை, ராஜலட்சுமிக்கு உதவி செய்வதுபோல நடித்து பழகி வந்த ஒரு பெண் கடத்திச் சென்றுவிட்டார்.

இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீஸார் விசாரித்ததுடன் 3தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. மருத்துவமனை வளாக சிசிடிவிகேமராக்களை ஆய்வு செய்தபோது, மருத்துவமனையில் இருந்து அந்தப் பெண், குழந்தையை ஒரு கட்டைப் பையில் வைத்து கடத்திச் செல்வதும், அங்கிருந்து ஆட்டோவில் புதிய பேருந்து நிலையம் சென்றதும் தெரியவந்தது. ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரித்ததில், அந்தப் பெண் பட்டுக்கோட்டை செல்லும் பேருந்தில் ஏறிச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

பின்னர், பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, அதில் அந்தப்பெண் பேருந்தில் இருந்து இறங்கிச் செல்வது பதிவாகியிருந்தது.

இதையடுத்து, பட்டுக்கோட்டை சென்ற தனிப்படை போலீஸார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் உதவியோடு, பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா நகரைச் சேர்ந்த விஜி(37) என்பவரைப் பிடித்து விசாரித்தனர். இதில், அவர் குழந்தையை கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து, போலீஸார் விஜியை கைது செய்துகுழந்தையை மீட்டனர். பெற்றோர்குணசேகரன் - ராஜலட்சுமியிடம்தஞ்சாவூர் எஸ்பி ரவளிப்பிரியா குழந்தையை ஒப்படைத்தார். கடத்தப்பட்ட, 30 மணிநேரத்தில் குழந்தையை மீட்ட தனிப்படையினரை எஸ்பி பாராட்டினார்.

விஜியிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது: விஜிக்கு ஏற்கெனவே 2 திருமணங்கள் நடைபெற்று விவாகரத்து ஆன நிலையில், 3-வதாக பாலமுருகன் என்பவரை திருமணம் செய்து வசித்து வந்துள்ளார். அவரது சொத்துகளை அபகரிக்க, தான் கர்ப்பமாக இருப்பதுபோல நடித்து, வளைக்காப்பு நடத்தியுள்ளார். பின்னர், பிரசவத்துக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு வந்தவர், நேற்று முன்தினம் பெண் குழந்தையுடன் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in