Published : 05 Oct 2021 03:11 AM
Last Updated : 05 Oct 2021 03:11 AM

பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் தொல்லை வழக்கில் - முன்னாள் சிறப்பு டிஜிபி, எஸ்பி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி :

கடந்த பிப்.21-ல் டெல்டா மாவட்டங்களில் அப்போதைய முதல்வர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பணியில் இருந்த, அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபி பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், அந்த சிறப்பு டிஜிபிக்கு ஆதரவாக பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்ததாக அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி ஆகியோர் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இருவர் மீதும் விழுப்புரம் சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த ஆக.9 முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை நேற்று நடுவர் கோபிநாதன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி நேரில் ஆஜரானார். முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை. அவரது தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி வராதது குறித்து மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை குற்றவியல் நடுவர் ஏற்றுக்கொண்டார்.

இதனிடையே, சிறப்பு டிஜிபி தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் நீதிமன்ற வரம்புக்குள் வராது எனவே, வேறு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல், எஸ்பி தரப்பில், வழக்குக்கும் எனக்கும் சம்மந்தமில்லை. எனவே, வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இருவரும் தனித்தனியாக மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த 2 மனுக்களும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, இருதரப்பு வாதங்கள் நடைபெற்று வந்தன. நேற்று மீண்டும் இந்த மனுக்கள் மீதான இருதரப்பு வாதம் நடத்தப்பட்டு, முடிவடைந்தது. தொடர்ந்து இந்த மனு மீது விசாரணை நடத்திய நடுவர் கோபிநாதன், டிஜிபி, எஸ்பி தாக்கல் செய்த 2 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்தவழக்கை விசாரிக்க விழுப்புரம் குற்றவியல் நடுவர் மன்றத்துக்கு முழு அதிகாரம் இருப்பதாகவும், செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதால் அவரை வழக்கில்இருந்து விடுவிக்க முடியாது என்றும் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை வரும், 8-ம் தேதிக்கு தள்ளி வைத்து நடுவர் கோபிநாதன் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x