Published : 22 Sep 2021 03:04 AM
Last Updated : 22 Sep 2021 03:04 AM

இணையவழி விநாடி-வினா தேர்வில் - நடத்தாத பாடங்களில் இருந்து கேள்வியால் மாணவர் குழப்பம் :

கரோனா தொற்று பரவலால் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கடந்த செப்.1-ல் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளி திறந்ததில் இருந்து 45 நாட்களுக்கு 10-ம்வகுப்பு மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு பாடங்களை நினைவுப்படுத்த வேண்டுமென கல்வித்துறை உத்தரவிட்டது. இதற்கான பாடத்திட்டமும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டன. அதன்படி, பாடங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் செப்.18 முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் இணையவழியில் விநாடி-வினா முறையில் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.

அதன்படி செப்.18-ல் நடந்த தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம்,அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களில் இருந்து தலா 10 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒன்றரை மணி நேரம் நடந்த இத்தேர்வில் பெரும்பாலான கேள்விகள் நடத்தாத 10-ம் வகுப்பு பாடங்களில் இருந்து கேட்கப்பட்டன.இதனால் மாணவர்கள் குழப்பமடைந்தனர்.

இதுகுறித்த சிவகங்கை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: கல்வித்துறை உத்தரவுப்படி தற்போது 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு பாடங்களை நினைவுபடுத்தி நடத்தி வருகிறோம். ஆனால், நடத்தாத 10-ம் வகுப்பு பாடங்களில் இருந்து கேள்விகளை கேட்கின்றனர். வருங்காலங்களில் இதுபோன்ற குழப்பம் இல்லாமல் கற்பித்த பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களின் கற்றல் திறனை அறிந்துகொள்ள முடியும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x