செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.13 லட்சத்துக்கு - ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலம்? : கிராம மக்களிடம் ஆட்சியர் விசாரணை

ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலம் விட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக துத்திப்பட்டு கிராம மக்களிடையே உரையாற்றும் விழுப்புரம் ஆட்சியர் மோகன்.
ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலம் விட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக துத்திப்பட்டு கிராம மக்களிடையே உரையாற்றும் விழுப்புரம் ஆட்சியர் மோகன்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிஊராட்சி ஒன்றியம் பொன்னங்குப்பம் ஊராட்சிமன்றத் தலைவர் பதவி ரூ.13 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டதாக வெளியான தகவலால் மற்றொரு பிரிவினர் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்னங்குப்பம் ஊராட்சி மன்றத்தலைவர் பதவி ஆதி திராவிடர்மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொன்னங்குப்பம், துத்திப்பட்டு ஆகிய 2 கிராமங்களை உள்ளடக்கிய பொன்னங்குப்பம் ஊராட்சியில் 3,900 வாக்குகள் உள்ளன. இதில் துத்திப்பட்டு கிராம வாக்குகளே அதிகம்.

இந்த நிலையில் பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பதவி அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பதவிக்கு நேற்று முன்தினம் இரவு ஏலம் நடைபெற்றதாகவும், அதில் மங்கை என்பவர் ரூ.13 லட்சத்துக்கு தலைவர் பதவியை ஏலம் எடுத்துள்ளதாகவும் மற்றொரு கிராமமான துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தவிர மேலும் 2 ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினர்கள் பதவியும் ஏலம் விடப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனவே உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக சுத்திப்பட்டு கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் ஆட்சியர் மோகன் நேற்றுபொன்னங்குப்பம் ஊராட்சிக்உட்பட்ட துத்திப்பட்டு கிராமத்தில் கிராம மக்களிடையே உரையாற்றினார்.

“அரசியலமைப்புச் சட்டத்துக்கும், மக்களாட்சியின் தத்துவத்துக்கும் புறம்பாக நடைபெறும் இத்தகைய நிகழ்வுகள் கண்டிக்கத்தக்கவை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பதவிகள் இவ்வாறு ஏலம் விடப்படுவது, மக்களின்உணர்வுகளுக்கு ஊறுவிளைவிக்கின்ற செயல் என்பதால், ஜனநாயகத்துக்கு ஊறு விளைவிப்பதை தடுத்திட மாவட்ட தேர்தல்நடத்தும் அலுவலர் மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

தொடர்ந்து, பொன்னங்குப்பம் ஊராட்சியில் நடைபெற்ற சம்பவம் குறித்து அறிக்கை அளிக்கசெஞ்சி ஊராட்சி ஒன்றிய வட்டார அலுவலருக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஆட்சியர் உத்தரவின் பேரில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அலுவலர்கள் அக்கிராமத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, விழுப்புரம் மாவட்டத்தில் சில கிராமங்களில், ‘இதுபோன்று பதவிகளை ஏலம் விடுவது தேர்தல் ஆணைய சட்டப்படி குற்றம்’ என்று தண்டோரா மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in