கோடநாடு வழக்கு அக்.1-க்கு தள்ளிவைப்பு : உதகை நீதிமன்றம் உத்தரவு

உதகை நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரான சயான். (அடுத்த படம்) மனோஜ். படங்கள்: ஆர்.டி.சிவசங்கர்
உதகை நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரான சயான். (அடுத்த படம்) மனோஜ். படங்கள்: ஆர்.டி.சிவசங்கர்
Updated on
1 min read

கோடநாடு கொலை மற்றும்கொள்ளை வழக்கு விசாரணையை அக்.1-ம் தேதிக்கு தள்ளிவைத்து உதகை நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் கடந்த 2017 ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவு புகுந்த ஒரு கும்பல், காவலாளி ஓம்பகதூரை கொலை செய்துவிட்டு, பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருட்களை கொள்ளையடித்து சென்றது.

இக்கொள்ளை, கொலை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக சயான் மற்றும் கனகராஜ் ஆகியோரைக் காவல்துறையினர் சந்தேகித்தனர். இந்நிலையில், கனகராஜ் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்குதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். வாளையாறு மனோஜூக்கு யாரும் உத்தரவாதம் அளிக்காததால் அவர் குன்னூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளார். மற்றவர்கள் ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கின் திருப்புமுனையாக காவல்துறையினர் சயான் மற்றும் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் மறுவிசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்குஉதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. சயான் மற்றும் வாளையாறு மனோஜ் ஆஜராகியிருந்தனர்.

மற்ற 8 பேரும் ஆஜராகவில்லை. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆஜராகினர். சாட்சிகள் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆனந்தகிருஷ்ணன், சந்தோஷ்குமார், சுரேஷ்குமார் ஆஜராகினர். கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், நடராஜன் ஆஜராகவில்லை.

விசாரணை தொடங்கியதும் அரசு வழக்கறிஞர் மேல் விசாரணைக்கு அவகாசம் தேவை என வலியுறுத்தினார். அதன்பேரில் நீதிபதி சஞ்சய் பாபா, விசாரணையை அக். 1-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இதுகுறித்து அரசு வழக்கறிஞர் ஷாஜகான் கூறும்போது, “கோடநாடு எஸ்டேட்டில் ஒரு காவலாளி கொலை செய்யப்பட்டுள்ளார். கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் சந்தேக மரணம் அடைந்துள்ளார். ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இவை தனித்தனி நிகழ்ச்சிகளாக இருந்தாலும், ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பதால் மேல் புலன் விசாரணை தேவைப்படுகிறது. இந்த வழக்கில் ஒரு சில விஷயங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால், இவ்வழக்கு தொடர்பாக தேவைப்பட்டால் யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம்.

கூடுதல் விசாரணையில் கால தாமதம் ஏற்படுவதாக கூறப்பட்டாலும், இவ்வழக்கு தொடர்பாக முழு விவரங்களையும் வெளியே கொண்டு வர வேண்டும் என்பது அரசின் நோக்கம்’’ என்றார்.

விசாரணைக்கு தனிப்படை அமைப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த நீலகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கோடநாடு வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்த தடையில்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தற்போது தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதால், விசாரணை விரிவடையும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in