வெள்ளகோவில் அருகே கரும்பு வெட்டும் தொழில் ஒப்பந்ததாரர் கடத்தல் : 6 தனிப்படை அமைத்து போலீஸ் விசாரணை

வெள்ளகோவில் அருகே கரும்பு வெட்டும் தொழில் ஒப்பந்ததாரர் கடத்தல் :  6 தனிப்படை அமைத்து போலீஸ் விசாரணை
Updated on
1 min read

வெள்ளகோவில் அருகே கரும்புவெட்டும் ஒப்பந்ததாரர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, 6 தனிப்படைகள் அமைத்து போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் பேராட்டத்தைச் சேர்ந்தவர் ரவி(50).கரும்பு வெட்டும் ஒப்பந்ததாரர். இவர் திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காடுவலசு பகுதியில் வயலில் கரும்பு வெட்டுவதற்கு ஒப்பந்தம் எடுத்திருந்தார். இதையடுத்து தொழிலாளர்களை அழைத்து வந்த ரவி, அப்பகுதியிலேயே தங்கியிருந்து கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

நேற்று முன்தினம் இரவு, பணிமுடிந்து தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுத்துவிட்டு அவர்களுடன் ரவி பேசிக் கொண்டிருந்தார். அப்போது காரில் வந்தகும்பல் ஒன்று, ரவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. திடீரென ரவியை காரில் தூக்கிப்போட்டு கடத்திச் சென்றனர். அவரிடம் பணி செய்த தொழிலாளர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக வெள்ளகோவில் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீஸார், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். ரவியை மீட்க 6 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

பணம் கொடுக்கல் வாங்கல்தொடர்பாக கடத்தல் நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். கடத்தல் கும்பல் வந்த வாகனத்தை கொண்டு அப்பகுதியில் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்துக்குள் காங்கயம், பல்லடத்தை தொடர்ந்து வெள்ளகோவில் பகுதியிலும் கடத்தல் சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in