தேசிய மனித உரிமை ஆணையம் - நடிகர் விவேக் மரணம் தொடர்பான புகாரை விசாரணைக்கு ஏற்றது :

தேசிய மனித உரிமை ஆணையம்  -  நடிகர் விவேக் மரணம் தொடர்பான புகாரை விசாரணைக்கு ஏற்றது :
Updated on
1 min read

நடிகர் விவேக் கடந்த ஏப்.17-ம்தேதி திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இந்த திடீர்மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சி அடைய வைத்தது. இறப்பதற்கு 2 நாட்கள் முன்னதாக அவர் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டு மக்களுக்கு மத்தியில் அதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.

இந்நிலையில், கரோனா தடுப்பு ஊசி செலுத்தியதால் விவேக் மரணம் அடைந்ததாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் புகார் மனு அளித்தார். இந்தப் புகார் மனுவை தேசிய மனித உரிமை ஆணையம் நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து சரவணன் கூறும்போது, “கரோனா தடுப்பூசியை யார் யார் செலுத்திக் கொள்ள வேண்டும்? யாருக்கு செலுத்தக் கூடாது என்பதை மத்திய, மாநில அரசுகள் வரையறுக்கவில்லை. மேலும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்பு உணவு முறைகள் மற்றும் வாழ்க்கை முறைகள் குறித்த தெளிவான விளக்கமும் வெளியிடவில்லை. இதனால்தான் நடிகர் விவேக் உயிரிழந்த கடந்த ஏப்ரல் 17-ம் தேதியே தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு புகார் அளித்தேன். அதன்படி ஆணையம் புகாரை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

நடிகர் விவேக்கின் மரணம் தொடர்பாக முழுமையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முன்பு அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ள வேண்டும் என்று அந்தப் புகாரில் தெரிவித்துள்ளேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in