Published : 21 Aug 2021 07:00 AM
Last Updated : 21 Aug 2021 07:00 AM

மேகேதாட்டு அணையால் நமக்குள் பிரிவினை வேண்டாம் : ஓசூரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து

மேகேதாட்டு அணையால் நமக்குள் பிரிவினை வேண்டாம் என ஓசூரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

கர்நாடகாவில் மேகேதாட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி, தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம்நகரில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்க ஓசூருக்கு வந்திருந்த, அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், டிராக்டர் ஓட்டியபடியே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்தார். ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:

தமிழகம் ஏற்கெனவே வறண்ட பூமியாக காட்சியளிக்கிறது. மேகேதாட்டுவில் அணை கட்டினால், தமிழகம் பாலைவனமாகிவிடும். காவிரி தண்ணீரை நம்பியே தமிழகம் உள்ளது. காவிரி நீரால் தமிழகத்தில் 7 மாவட்டங்கள் பயன்பெறுவதால், மேகேதாட்டுவில் அணைக் கட்டக் கூடாது. தஞ்சாவூரில் விளைவிக்கப்படும் நெல் தான், இந்தியா முழுவதும் உணவுக்கு பயன்படுகிறது. தஞ்சாவூருக்கு தண்ணீர் வரவில்லை என்றால் விவசாயம் கேள்விகுறியாகும்.

தமிழக முதல்வர், பிரதமர் ஆகியோர் இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்சினைகள் உருவாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகாவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் பசவராஜ் பொம்மை, யார் தடுத்தாலும் மேகேதாட்டுவில் அணை கட்டியே தீருவோம் என சட்டவிரோதமாக பேசி வருகிறார். மேகேதாட்டுவில் ஒரு செங்கல் கூட வைக்க விட மாட்டோம்.

நாம் இனத்தால், ரத்தத்தால், மூச்சுக்காற்றால் ஒன்று தான். தண்ணீரால் மட்டுமே ஏன் பிரிவினை. நமக்குள் பிரிவினை வேண்டாம். காவிரி என்பது நமது அன்னை.அதற்காக எதையும் செய்வோம்.மத்தியிலும் பாஜக, கர்நாடகாவிலும் பாஜக அரசு. எனவே, மத்திய அரசு கர்நாடக அரசிடம் பேசி அணை கட்டும் திட்டத்தை கைவிடச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து கர்நாடக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x