பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் - குற்றவியல் நடுவர் மன்றத்தில் சிறப்பு டிஜிபி ஆஜர் :

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்  -  குற்றவியல் நடுவர் மன்றத்தில் சிறப்பு டிஜிபி ஆஜர் :
Updated on
1 min read

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறப்புடிஜிபி பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நடுவர் மன்றத்தில் சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படும் எஸ்பி ஆகியோர் நேற்று ஆஜராயினர்.

எஸ்பியாக உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியில் இருந்துள்ளார். அவரது மேலதிகாரியான சிறப்பு டிஜிபி அவரது மாவட்டத்துக்கு வந்தபோது, மரியாதை நிமித்தமாக அவரைச் சந்தித்துள்ளார். அப்போது அந்த பெண்எஸ்பியை தனது காரில் ஏறச்சொன்ன சிறப்பு டிஜிபி, அவரிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் குறித்து அந்தப்பெண் ஐபிஎஸ் அதிகாரி அப்போதைய தமிழக டிஜிபி மற்றும் உள்துறைச் செயலரிடம் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது சிபிசிஐடி போலீஸார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 23-ம் தேதி விழுப்புரம் குற்றவியல் நடுவர் முன்பு அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ஆஜராகி, வாக்குமூலம் அளித்தார். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின்பேரில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீஸார் கடந்த 29-ம் தேதி விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நடுவர் மன்றத்தில் சுமார் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபி, இவ்வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் மற்றொரு எஸ்பி ஆகியோர் ஆஜராயினர். அரசு சார்பில் சிறப்பு வழக்கறிஞர்கள் வைத்தியநாதன், கலாஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இதைத் தொடர்ந்து தலைமைக் குற்றவியல் மன்ற நடுவர் கோபிநாதன் இருவருக்கும் குற்றg;பத்திரிகையின் நகலை வழங்க உத்தரவிட்டதுடன், வழக்கை வரும் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in