மூன்று நாள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு - குடியரசுத் தலைவர் உதகையில் இருந்து டெல்லி திரும்பினார் :

உதகையில் இருந்து டெல்லி திரும்பும் முன்னர் ராஜ்பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மரக்கன்றை நட்டார்.
உதகையில் இருந்து டெல்லி திரும்பும் முன்னர் ராஜ்பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மரக்கன்றை நட்டார்.
Updated on
1 min read

மூன்று நாள் சுற்றுப்பயணமாக உதகை வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று காலை உதகையில் இருந்து கோவை வழியே டெல்லி திரும்பினார்.

5 நாள் பயணமாக கடந்த 2-ம் தேதி தமிழ்நாடு வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர், 3 நாள் பயணமாக கடந்த 3-ம் தேதி உதகை வந்தார்.

உதகை ராஜ்பவன் ஆளுநர் மாளிகையில் தங்கிய குடியரசுத் தலைவர், குன்னூர் வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் தாவரவியல் பூங்காவை கண்டு ரசித்தார். நேற்று முன்தினம், நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். மேலும், தேயிலை விவசாயிகள் மற்றும் இயற்கை வேளாண் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

இந்நிலையில், 3 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, நேற்று காலை 10.30 மணியளவில் உதகையில் இருந்து திரும்பினார். ஹெலிகாப்டர் மூலம் கோவை சூலூரில் உள்ள விமானப்படைத் தளத்துக்குச் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்ல ஏற்பாடுகள் நடந்தன. இந்நிலையில், உதகையில் காலை காலநிலை மாறியது. கடும் மேகமூட்டம் ஏற்பட்டது.

மோசமான வானிலை காரணமாக குடியரசுத் தலைவரின் பயணம் மாற்றப்பட்டது. பாதுகாப்பு கருதி, சாலை மார்க்கமாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. குடியரசுத் தலைவர் ராஜ்பவனில் இருந்து புறப்படும் முன்னர், ராஜ்பவன் வளாகத்தில் மரக்கன்றை நட்டார். தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆகியோர் குடியரசுத் தலைவரை வழியனுப்பி வைத்தனர்.

உதகையில் இருந்து கோத்தகிரி, மேட்டுப்பாளையம் வழியாக அவர் கோவை சென்றார். குடியரசுத் தலைவருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடன் சென்றார். சூலூர் விமானப்படை தளத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குடியரசுத் தலைவரை வழியனுப்பி வைத்தனர். அங்கிருந்து குடியரசுத் தலைவர் தனி விமானம் மூலம் டெல்லி திரும்பினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in