Published : 01 Aug 2021 06:29 AM
Last Updated : 01 Aug 2021 06:29 AM
“ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை இனிமேலும் நீட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை” என கனிமொழி எம்பி தெரிவித்தார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கனிமொழி எம்பி கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலை நிச்சயமாக திறக்கப்படாது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு வாக்குறுதி தந்துள்ளார். சென்ற ஆட்சிக் காலத்தில் கரோனா நோய் பரவலின்போது, ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்ததால் அந்த ஆலையின் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் மட்டும் திறக்கப்பட்டு, அங்கு உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டது.
ஆனால், அவர்கள் கூறிய அளவுக்கு ஆக்சிஜன் தர முடியாவிட்டாலும், தூத்துக்குடி, திருநெல்வேலியில் உள்ள மக்களுக்கு பயன்படக்கூடிய அளவுக்கு அங்கே ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டது. ஆனால், இப்போது இருக்கும் சூழ்நிலையில் ஆக்சிஜன் தேவையில்லை என்பதை தெளிவாக தமிழக அரசு தன் வாதத்தின் வழியாக உச்ச நீதிமன்றத்தில் எடுத்து வைத்துள்ளது. அதனால், ஆக்சிஜன் உற்பத்தியை இனிமேலும் நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை.
3-வது அலை வந்தால்?
கேரளாவில் 3-வது அலைக்கான அறிகுறிகள் தெரியும்போதே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதற்கானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கிவிட்டார்.
ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை குளிர்விக்கும் கருவியின் செயல்பாட்டை ஒரே நாளில் நிறுத்திவிட முடியாது. அதை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நிறுத்த வேண்டும். மேலும், அங்கு தேக்கி வைத்துள்ள ஆக்சிஜனையும் எடுக்க வேண்டும். அதற்காகவே அங்கு குறைந்தபட்ச மின்சாரம் வழங்கப்படுகிறது. கண்டிப்பாக மின்சாரம் வழங்குவது நிறுத்தப்படும்.
அதிமுக அரசு 10 ஆண்டுகளில் செய்ய முடியாததை, தமிழக முதல்வர் கிட்டத்தட்ட 100 நாட்களுக்குள் செய்துவிட்டார். அந்த காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான் அதிமுகவினர் போராட்டம் நடத்துகின்றனர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT