Published : 28 Jul 2021 03:15 AM
Last Updated : 28 Jul 2021 03:15 AM

3 கவுன்சிலர்களோடு - அதிமுக ஒன்றியத் தலைவர் கட்சி மாறியதால் திமுக வசமானது சிவகங்கை ஒன்றியம் :

3 கவுன்சிலர்களோடு அதிமுக ஒன்றியத் தலைவர் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதையடுத்து சிவகங்கை ஒன்றியம் திமுக வசமானது.

சிவகங்கை ஒன்றியத்தில் 18வார்டுகள் உள்ளன. இதில் அதிமுகவில் 8 பேர், பாஜக, தேமுதிகவில் தலா ஒருவர் என 10 கவுன்சிலர்கள் அதிமுக தரப்புக்கு ஆதரவாக இருந்தனர். இதனால் அதிமுகவைச் சேர்ந்த மஞ்சுளா பாலச்சந்தர் தலைவராகவும், கேசவன் துணைத் தலைவராகவும் இருந்தனர்.

திமுக தரப்பில் திமுகவில் 6 பேர், காங்கிரஸ் ஒருவர் என 7 கவுன்சிலர்கள் இருந்தனர். மேலும் அமமுக கவுன்சிலரும் திமுகவுக்கு ஆதரவாக இருந்தார். இந்நிலையில் சிலநாட்களுக்கு முன்பு அமமுக கவுன்சிலர் பத்மாவதி திமுகவில் இணைந்தார். இதனால் திமுகவின் பலம் 8 ஆனது. மேலும் அதிமுகவைச் சேர்ந்த சிலரும் திமுகவில் இணையத் தயாராக இருந்தனர்.

இதனால் தனது பதவிக்கு ஆபத்து ஏற்படலாம் எனக் கருதியஒன்றியத் தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர், தனது ஆதரவு கவுன்சிலர்கள் அதிமுகவைச் சேர்ந்த வேல்முருகன், லட்சுமி சரவணன், தேமுதிகவைச் சேர்ந்த ரமேஷ் ஆகிய 3 கவுன்சிலர்களுடன் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதனால் திமுகவின் பலம் 12 ஆக மாறியதால், சிவகங்கை ஒன்றியம் திமுக வசமானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x