Published : 27 Jul 2021 03:13 AM
Last Updated : 27 Jul 2021 03:13 AM
மதுரை எய்ம்ஸில் வரும் கல்விஆண்டில் 50 எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை தொடங்குவது தொடர்பாக திட்ட அறிக்கை அளிக்குமாறு எய்ம்ஸ் நிறுவனத்தை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் சுகாதாரத் துறை செயலர் தெரிவித்தார்.
மதுரை தோப்பூரில் அறிவிக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை தற்காலிக இடத்தில் அமைத்து, அங்கு வெளி நோயாளிகள் பிரிவு மற்றும் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை தொடங்கவும் உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம் உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக சுகாதாரத் துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் பதில் மனுத் தாக்கல் செய்தார். அதில், மதுரை எய்ம்ஸ் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் 16.7.2021-ல்நடைபெற்றது.
அரசு தகவல் தெரிவிக்கும்
இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. அப்போது வரும் கல்வி ஆண்டில் 50 எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை தொடங்குவது தொடர்பாக திட்ட அறிக்கை அளிக்குமாறு எய்ம்ஸ் நிறுவனத்தை கேட்டுக்கொண்டோம்.
அதன்படி எய்ம்ஸ் நிறுவனம் திட்ட அறிக்கை அளித்தால், எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை தொடங்குவதற்கு தேவையான இடத்தை கண்டறிந்து எய்ம்ஸ்நிறுவனத்துக்கு அரசு தகவல்தெரிவிக்கும் எனக் கூறப்பட்டுஇருந்தது.
பின்னர், நீதிபதிகள், எம்பிபிஎஸ் மாணவர்களைச் சேர்த்தால், அவர்களுக்கு எங்கு பாடங்கள் கற்பிக்கப்படும் எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு வழக்கறிஞர் வீரா.கதிரவன், மதுரை, தேனி, சிவகங்கையில் அரசு மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிகளில் அவர்களுக்கு பாடங்களை கற்பிக்கலாம் என்றார்.
இதையடுத்து தமிழக அரசின் பதில் மனு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு,விசாரணையை நீதிபதிகள் ஜூலை 30-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT