

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த் துறை தலைவர் பால் சந்திரமோகன் (55). இவர் மீது கல்லூரியின் தமிழ்த் துறை முதுகலை மாணவிகள் 5 பேர் பாலியல் புகார் கூறியிருந்தனர்.
இதுகுறித்து கல்லூரியின் உள் விசாரணைக் குழு,விசாரணை நடத்தி அளித்த அறிக்கையின் அடிப்படையில் பால் சந்திரமோகனை அண்மையில் கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெயப்பிரீத்தா, மாவட்ட சமூக நல அலுவலர் தமீமுன்னிசா உட்பட 7 பேர் அடங்கிய விசாரணைக் குழுவினர், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பால் சந்திரமோகன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக் குழு பரிந்துரையின்பேரில், ஆட்சியர் உத்தரவின் அடிப்படையில், பால் சந்திரமோகன் மீது புகார் அளித்த மாணவிகளிடம் ரங்கம் மகளிர் போலீஸார் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, தமீமுன்னிசா அளித்த புகாரின்பேரில் பால் சந்திரமோகன் மீது போலீஸார் 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.