Published : 11 Jun 2021 03:13 AM
Last Updated : 11 Jun 2021 03:13 AM
தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள விதிகளுக்கு எதிராக கர்னாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா வழக்கு தொடர்ந்துள்ளார்.
சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதமாக தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் புதிய கட்டுப்பாட்டு விதிகளை மத்தியஅரசு கடந்த பிப்ரவரியில் கொண்டுவந்தது. இந்த விதிகளை எதிர்த்து பிரபல கர்னாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஒரு படைப்பாளிக்கு தனி மனித கருத்துமற்றும் பேச்சு சுதந்திரத்துடன் கூடிய கற்பனைத் திறன்தான் மிகப்பெரிய சொத்து. தனி மனித சுதந்திரம், வாழ்வதற்கான உரிமை என அனைத்தையும் அரசியலமைப்பு சட்டம் உறுதி செய்துள்ளது.
அதேநேரம், சமூக ஊடகங்கள் வழியே கருத்து பரிமாற்றம் செய்ய தடைவிதிக்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் பல திருத்தங்களை மத்தியஅரசு செய்து வருகிறது. கடந்த பிப்ரவரியில் இடைநிலை வழிகாட்டுதல்கள், டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்ட விதிகள் 2021-ஐ புதிதாக அறிமுகம் செய்துள்ளது.
இந்த நெறிமுறைகள் தனிநபர் கருத்துமற்றும் கற்பனை சுதந்திரத்தை பறிக்கும் விதமாகவும், அவற்றை தணிக்கைசெய்யும் விதமாகவும் உள்ளது. இந்தவிதிகள் செல்லாது என்றும், அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்றும் அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு விசாரித்து, மத்திய அரசு 3 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT