Published : 11 Jun 2021 03:13 AM
Last Updated : 11 Jun 2021 03:13 AM
நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் சமீபத்தில் பெய்த மழையில் நனைந்து, பல மாவட்டங்களில் நெல் மூட்டைகள் வீணாகிவருவதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதன் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தது.
தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது.
அப்போது “விவசாயிகளின் உழைப்பு மழைநீரால் வீணாவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடுபட்டு உற்பத்தி செய்துள்ள நெல் மூட்டைகள் மழை நீரில் வீணாகிப் போனால்,விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, “காய வைப்பதற்காக கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்துள்ளன. இதுதொடர்பான முழு விவரங்களைப் பெற்று தெரிவிக்கிறேன்” என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். அத்துடன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT