Published : 10 Jun 2021 03:11 AM
Last Updated : 10 Jun 2021 03:11 AM
கூட்டுறவுச் சங்கங்களில் 5 பவுன் நகைக் கடன் தள்ளுபடி குறித்த அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் வழங்குதல், உர விநியோகம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை வகித்தார். வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, கூட்டுறவுத் துறைப் பதிவாளர் சுப்ரமணியன், ஆட்சியர் அனீஷ் சேகர் மற்றும் ஆறு மாவட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கு கரோனா நிவாரண நிதி, மளிகைப் பொருட்கள் தொகுப்பு தடையின்றி விரைவாகச் சென்றடைவதற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கிய அமைச்சர் ஐ.பெரியசாமி
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாயிகளுக்குத் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலமாக கடன்கள் வழங்க ரூ.11,500 கோடிக்கு மேல் இலக்குநிர்ணயிக்கப்பட்டு குறைபாடு இல்லாமல் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 2.10 கோடி ரேஷன் அட்டை தாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி, மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்குவது தொடர்பாக விவாதித்தோம். இந்த அரசு, அனைத்துத் துறைகளிலும் சிறப்பாகச் செயல்படுகிறது.
மழையால் சேதமடையும் விளைபொருட்கள் குறித்து தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பேரிடர் பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயிகளுக்கு உடனே உரிய நிவாரணம் வழங்கப்படும்.
கூட்டுறவுச் சங்கங்களில் 5 பவுன் நகைக் கடன் தள்ளுபடி குறித்த அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும். கடந்த ஆட்சியில் விவசாயிகள் அல்லாதோருக்குத் தள்ளுபடி கொடுத்து உள்ளதாக நிறைய புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. அது குறித்து ஆய்வு செய்து தவறு நடந்தது உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவுப் பணிகளில் சேர்வதற்காக கடந்த ஆட்சியில் நேர்காணல் முடிந்தோரின் விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT