Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

புதுச்சேரியில் ஊரடங்கில் தளர்வு - 45 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் திறப்பு :

புதுச்சேரியில் கரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஏப்.24-ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய கடைகளைத் தவிர்த்து வணிக நிறுவனங்கள், மதுக்கடைகள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில், ஊரடங்கில் பலமுக்கியத் தளர்வுகள் நேற்று முன்தினம் நள்ளிரவு அறிவிக்கப்பட்டன. அதன்படி, நேற்று காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை கடற்கரை சாலையில் நடைபயிற்சி செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. அதையடுத்து பலரும் நடைபயிற்சி மேற்கொண்டனர்.

காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து கடைகளும் திறந்து இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டதால் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. வழிபாட்டு தலங்களும் பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட்டன. ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக மதுபானக் கடைகள், சாராயம் மற்றும் கள்ளுக் கடைகள் காலை 9 மணி முதல்மாலை 5 வரை திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து கலால்துறை துணை ஆணையர் சுதாகர் தலைமையில் அதிகாரிகள் மதுக்கடைகளுக்கு வைக்கப்பட்டிருந்த சீல்களை அகற்றினர். மதுக் கடைகளில் தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டு, மது வாங்குவோர் வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர். மது வாங்க வருவோருக்கு கிருமி நாசினி வழங்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

45 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் திறந்ததால் மது அருந்துவோர் மகிழ்ச்சியுடன் மது வகைகளை வாங்கிச் சென்றனர். சிலர் மது பாட்டில்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். மொத்த விற்பனைக் கடைகளில் கூட்டம் அதிகம் இருந்தது. மீண்டும் மதுக்கடைகளை அடைக்க வாய்ப்புஇருக்கலாம் என்ற சந்தேகத்தில்அதிகளவில் மது வகைகளை வாங்கிச் சென்றனர். சில்லரை விற்பனைக்கடைகளில் கூட்டம் இல்லை. தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் எல்லையோர மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. எனினும் பூங்கா, நூலகங்கள் திறக்க அனுமதி தரப்படவில்லை.

வீடு தேடி சென்று விநியோகம்

மதுக் கடைகளில் கூட்டத்தைத் தவிர்க்க, வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் சென்று மதுபானங்களை வழங்க கலால் துறை அனுமதி அளித்துள்ளது. ஆன்லைன் செயலி, போன் மூலம் இதை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மதுக்கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இந்த நடைமுறை புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு மட்டுமே பொருந்தும் என்று கலால்துறை தெரிவித்துள்ளது. பார்களில் மது அருந்த தடை நீடிக்கிறது. விதிகளை மீறினால் மதுக்கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x