Published : 14 May 2021 03:12 AM
Last Updated : 14 May 2021 03:12 AM

மநீம பொதுச் செயலாளர் சந்தோஷ் பாபு ராஜினாமா : சொந்த காரணத்தால் விலகுவதாக தகவல்

சென்னை

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் சந்தோஷ் பாபு திடீரென விலகியுள்ளார். கட்சியின் சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் பத்மபிரியாவும் விலகுவதாக அறிவித்திருப்பது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சி நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி. இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்டவற்றுடன் இணைந்து போட்டியிட்டது.

இத்தேர்தலில் இந்த கூட்டணி வேட்பாளர்கள் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சியின் வாக்கு வங்கியும் 2.45 சதவீதமாக சரிந்தது.

இதையடுத்து, கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தங்கள்பதவிகளை ராஜினாமா செய்தனர். கட்சியின் துணை தலைவராக இருந்த மகேந்திரன், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

பின்னர், மக்கள் நீதி மய்யம்கட்சியில் ஜனநாயகம் இல்லைஎன்பது போன்ற குற்றச்சாட்டுகளையும் மகேந்திரன் தெரிவித்தார்.

‘தான் கட்சியில் இருந்து நீக்கப்படுவதை அறிந்து, மகேந்திரன் தானாகவே விலகிவிட்டார்’ என்று கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

‘கட்சியின் புதிய பொறுப்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்’ என்று கட்சியின் பொதுச் செயலாளர் சந்தோஷ் பாபு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கட்சியில் இருந்து விலகுவதாக பொதுச் செயலாளர் சந்தோஷ் பாபு நேற்று திடீரென அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘‘மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் எனது பதவிகளில் இருந்து ராஜினாமா செய்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். என் சொந்த காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளேன். என் மீது அன்பு வைத்திருந்த கமல்ஹாசன் மற்றும் நண்பர்களுக்கு நன்றி’’ என்று தெரிவித்துள்ளார்.

அணி நிர்வாகியும் விலகல்

கட்சியின் சுற்றுச்சூழல் அணிமாநிலச் செயலாளரும், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் மக்கள்நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டவருமான பத்மபிரியாவும் கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று தனது ட்விட்டர் பதிவின்மூலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருவது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x