Published : 02 May 2021 03:13 AM
Last Updated : 02 May 2021 03:13 AM
தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் மக்கள் பணியை தொடருங்கள். இந்த இக்கட்டான சூழலில் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுங்கள் என்று தொண்டர்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம்:
ஞாயிற்றுக்கிழமை வெளியாக இருக்கும் தேர்தல் முடிவுகளுக்காக ஆவலோடு காத்திருப்பீர்கள். ஆர்வ மிகுதியில் உங்கள் பாதுகாப்பை மறந்துவிடக் கூடாது.
வாக்கு எண்ணும் மையங்களில் கூட்டம் கூட வேண்டியதில்லை. அங்கீகரிக்கப்பட்ட முகவர்களைத் தவிர பிற கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஊரடங்கு விதிமுறைகளைப் பின்பற்றி வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
தேர்தல் முடிவுகளைவிட உங்களுடைய பாதுகாப்பும், உங்கள் குடும்பத்தாரின் பாதுகாப்புமே எனக்கு முக்கியமானது. தேர்தல்என்பது முடிவல்ல. மக்கள் பணியில் முடிவு என்பது கிடையாது என்பதை நாம் நன்கு அறிவோம். இந்த தேர்தல் நமக்கு ஒரு புதிய அனுபவம். புதிய தொடக்கம்.
மக்களின் அன்பே பலம்
இந்த தேர்தல் பயணத்தில் மக்களுக்கு நம் மீது இருந்தநம்பிக்கையை உணர்ந்திருக்கிறோம். மக்கள் அன்பே நம் பலம். மக்கள் நலனே எதைக்காட்டிலும் முதன்மையானது.வெற்றி எனில் கொண்டாடத் தேவை இல்லை. தோல்வி எனில்துவள வேண்டியதில்லை. எதுவரினும் மக்கள் பணிகளைத் தொடருங்கள். இந்த இக்கட்டான சூழலில் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுங்கள்.
‘நாமே தீர்வு’ நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருப்பதை அன்றாடம் வரும் அறிக்கைகள் மூலம் அறிகிறேன். உங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். மக்களுக்காக, மக்களுடன் களத்தில் நிற்போம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT