பேரூராட்சி அலுவலகங்களில் 2 வாரங்களாக இணையம் முடக்கம் : பொதுமக்கள் வரி செலுத்த முடியாமல் தவிப்பு

பேரூராட்சி அலுவலகங்களில் 2 வாரங்களாக இணையம் முடக்கம் :  பொதுமக்கள் வரி செலுத்த முடியாமல் தவிப்பு
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் பேரூராட்சி அலுவலகங்களில் 2 வாரங்களாக இணையம் முடங்கியதால் பொதுமக்கள் வரி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 528 பேரூராட்சிகள் உள்ளன. இங்கு பிறப்பு, இறப்பு பதிவு செய்தல், சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, பிளான் அப்ரூவல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் இணைய வழியில் மேற்கொள்ளப்படுகின்றன.

பேரூராட்சிகளின் இணையதள சர்வரை தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் நிர்வகித்தது. அந்த ஒப்பந்தம் மார்ச் 31-ம்தேதியுடன் முடிவடைந்தது. தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்ததால், ஏப்.1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பேரூராட்சி அலுவலகங்களில் இணையதளம் முடங்கியுள்ளது.

இதனால் பிறப்பு, இறப்பு பதிவு செய்த பிறகு கட்டணம் செலுத்துதல், சொத்து வரி, குடிநீர் கட்டணம் வசூலித்தல் போன்ற பணிகள் முடங்கி உள்ளன. சில பேரூராட்சிகளில் இணையதளம் முடங்கியதாகக் கூறி எந்தப் பணியையும் செய்யாமல், மக்களை திருப்பி அனுப்புகின்றனர். ஒருசில பேரூராட்சிகளில் பழைய முறைப்படி பதிவேட்டில் பதிந்து வரி வசூல் செய்கின்றனர்.

இதுகுறித்து பேரூராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, “முடங்கிய இணையதளத்தை சரிசெய்யும் பணியில் தேசிய தகவல் மையம் (என்ஐசி) ஈடுபட்டுள்ளது. விரைவில் சரியாகிவிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுவரை பதிவேட்டில் பதிவு செய்து வரி வசூலிப்பு உள்ளிட்ட பணிகளைச் செய்கிறோம். இணையதளம் சரியானதும், அனைத்துப் பணிகளும் இணையம் மூலமே மேற்கொள்ளப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in