Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களை மே 2-ம் தேதி வரை கவனமாகப் பாதுகாக்க வேண்டும் என்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஆவடி, விருதுநகர், திருவையாறு, நாகர்கோவில் வாக்குச்சாவடிகளில் உதயசூரியனுக்கு அளித்தவாக்கு, தாமரை சின்னத்துக்கு விழுந்தது, மதுரவாயல் வாக்குச்சாவடி அருகில் பொதுமக்களைப் பார்த்து சாதியைக் குறிப்பிட்டு அமைச்சர் பெஞ்சமின் மிரட்டல் விடுத்தது, தொண்டாமுத்தூர் திமுகவேட்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்கள்.மற்றும் வேளச்சேரி தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றது, ஒட்டன்சத்திரம் மற்றும் மானாமதுரை தொகுதிகளில் அத்துமீறல்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து வந்தாலும், இந்த அதிகார துஷ்பிரயோகத்தையும், அராஜகத்தையும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் துணிச்சலுடன் எதிர்கொண்டு தேர்தல் களத்தில் மிகச் சிறப்பாகப் பணியாற்றினர்.
திமுக.வினரும், கூட்டணிக் கட்சியினரும் மே 2-ம் தேதி வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களைக் கவனமாக பாதுகாக்க வேண்டும்.
அங்கு பணியில் இருப்போர் தவிர வெளியாட்களின் நடமாட்டங்கள், யாரேனும் அத்துமீறி நுழைகிறார்களா என்பது பற்றி கண்காணிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை தொடங்கும் வரை, அந்த மையங்களில் ‘டர்ன் டியூட்டி’ அடிப்படையில் தங்களுக்குள் ஒதுக்கீடு செய்து கொண்டு, திமுகவினரும், கூட்டணிக் கட்சியினரும் இரவு பகலாக, தொய்வின்றி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும். விதிமீறல்கள் நடந்தால் உடனடியாக கட்சித் தலைமைக்குத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT