Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

ஹெச்.ராஜா போட்டியிட்ட காரைக்குடி தொகுதியில் - வாக்குப்பதிவு இயந்திரத்தின் சீல் உடைக்கப்பட்டதாக புகார் : மறுவாக்குப்பதிவு நடத்த பாஜக வலியுறுத்தல்

காரைக்குடி தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தின் சீல் உடைக்கப்பட்டு முறைகேடு நடந்திருப்பதாகவும், அந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும்எனவும் பாஜகவினர் வலியுறுத்திஉள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதியில் பாஜக சார்பில் ஹெச்.ராஜா, காங்கிரஸ் சார்பில் மாங்குடி, அமமுக சார்பில் தேர்போகி பாண்டி உள்ளிட்டோர் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில், காரைக்குடி கம்பன் கற்பகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி எண் 58-ல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சீல் உடைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த மையத்தில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும் பாஜகவினர் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி பாஜக முகவர் குருபாண்டி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: வாக்குச்சாவடி எண் 58-ல் வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு சீல் வைத்ததும், முகவர்கள் அனைவரையும் வாக்குப்பதிவு அலுவலர் வெளியேற்றினார்.

சில நிமிடங்களில் அந்த வாக்குச்சாவடியில் திடீரென மின்தடை ஏற்பட்டது. அந்த சமயத்தில் 3 பேர் வாக்குச்சாவடிக்குள் நுழைத்தனர். இதை கேள்விப்பட்டதும் நாங்கள் அங்கே சென்றோம். அதற்குள் மூவரும் தப்பிவிட்டனர். மேலும் வாக்குப்பதிவு இயந்திரத்தை பார்த்தபோது சீல் உடைக்கப்பட்டிருந்தது. வாக்குப்பதிவு இயந்திரத்தை வாகனத்தில் ஏற்றும்வரை வாக்குச்சாவடியில் முகவர்கள் இருக்கலாம். ஆனால் முகவர்களை அதற்கு முன்னதாகவே வெளியேற்றிவிட்டனர். திட்டமிட்டு முறைகேடு நடந்துள்ளது.

அதிகாரிகள் துணையோடு வாக்குப்பதிவு இயந்திரம் சீல் உடைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும். வாக்குச்சாவடிக்குள் நுழைந்த சமூகவிரோதிகள், துணை புரிந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பி.மதுசூதன்ரெட்டி கூறியதாவது:

சிவகங்கை, திருப்பத்தூர் ஆகிய தொகுதிகளில் தலா ஒரு விவிபேட் இயந்திரம் பழுதடைந்தது. அதேபோல் காரைக்குடி, மானாமதுரை ஆகியதொகுதிகளில் தலா ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்தது. அவற்றை உடனுக்குடன் மாற்றிவிட்டோம். மற்றபடி மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்களோ, முறைகேடுகளோ நடக்கவில்லை. இதனால் மறுவாக்குப்பதிவுக்கு வாய்ப்பே இல்லை என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x